அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவுதி மன்னருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த 4 ஆண்டுகளில் எப்போதும் இல்லாத அளவு உயர்ந்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா சமீபத்தில் பொருளாதார தடை விதித்துள்ளது.

மேலும் ஈரானிடம் இருந்து சர்வதேச நாடுகள் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும், அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனால்தான் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. பேரலுக்கு 100 டாலருக்கு மேல் விலை ஏறும்பட்சத்தில் சவுதி அரேபியா மற்றும் எண்ணெய் உற்பத்தி செய்யும் ‘ஓபேக்‘ நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதன்மூலம் எண்ணெய் விலை குறையும் என டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு சவுதி அரேபியா ஒத்துக் கொள்ளவில்லை.

இது டிரம்புக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மிசிசிப்பியில் ‘சவுத்அவ்ன்’ நகரில் நடந்த விழாவில் டிரம்ப் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது தனது நட்பு நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா குறித்து பேசினார். மேலும் மற்றொரு நட்பு நாடான சவுதி அரேபியா குறித்து குறிப்பிடும்போது மன்னரை கடுமையாக தாக்கினார்.

மக்களின் கரகோ‌ஷத்துக்கு இடையே பேசிய அவர், “பணக்கார நாடாக இருந்தாலும் சவுதி அரேபியாவை நாம்தான் பாதுகாக்கிறோம். நான் அந்நாட்டு மன்னர் சல்மான் மீது அதிக அன்பு வைத்திருக்கிறேன்.

மன்னரே உங்களை நாங்கள் (அமெரிக்கா)தான் பாதுகாக்கிறோம். எங்களது ராணுவத்தின் தயவு இன்றி உங்களால் அங்கு 2 வாரம் கூட தாக்கு பிடிக்க முடியாது” என்று எதைப்பற்றியும் பகிரங்கமாக குறிப்பிடாமல் மிரட்டல் விடுத்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!