மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் குடும்பத்துடன் குழிக்குள் போயிருப்போம்! – ஹிருணிகா

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்க்கப்படாமல்- மஹிந்த ஆட்சி நீடித்திருந்தால் தானும், நானும் எனது குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டிருப்போம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

: தனது தந்தையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுவந்த போதிலும் ஸ்ரீலங்காவில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மீண்டுமொருமுறை ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2011ஆம் ஆண்டு கொழும்பு கொலன்னாவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பிலான வழக்கு விசாரணையில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நேற்று முன்தினம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய குறித்த மரண தண்டனையை மேன்முறையீடு உறுதிப்படுத்தியது. இந்த நிலையில் பாரத லக்ஷ்மன் படுகொலை செய்யப்பட்டு இந்த மாதத்துடன் 7 வருடங்களாகின்ற நிலையில் அவரது புதல்வியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நேற்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது உரையாற்றிய அவர், மைத்திரி – ரணில் இணைந்த நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு ஆட்சிபீடம் ஏறியதினால் தனது குடும்பத்தினரின் உயிர் மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.

‘பிரதான கதிரையில் அமர்ந்திருந்து நேற்றுடன் ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தனது தொழிற்துறையை தங்கத்தால் பொறிக்கின்ற பணியை நிறைவேற்றி விட்டே சென்றுள்ளார். துமிந்த சில்வாவுக்கு இதற்கும் மேல் ஒரு நீதிமன்றம் இல்லை மேன்முறையீடு செய்வதற்கு. ஆனாலும் புதிய ஜனாதிபதி தெரிவாகிய பின்னர் துமிந்த விடுதலையாவார் என்று அவரது சகாக்கள் கூறியிருந்ததை கண்டேன். அவ்வளவு இலகுவாக புதிய ஜனாதிபதி ஒருவர் தெரிவாகமாட்டார். மக்களின் கைகளில்தான் அது இருக்கிறது. நல்லாட்சியில் இருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

நல்லாட்சி என்ற அரசாங்கம் வந்திருக்காவிட்டால் நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களில் நான் இருந்திருக்க மாட்டேன். எனக்குப் பதிலாக போதைவஸ்து வர்த்தகரே இருந்திருப்பார். அவர் தான் துமிந்த சில்வா. இன்னும் மஹிந்த ராஜபக்கவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் என்னை அல்லது எனது தாயாரை கொலை செய்திருப்பார்கள் அல்லது எங்காவது சென்று நாங்கள் தலைமறைவாக வாழவேண்டிய நிலை இருந்திருக்கும். உண்மையிலேயே துமிந்த சில்வா விடுதலைப் பெறுவார் என்றே நானும் நினைத்திருந்தேன். சில ஊடகங்கள் வெளியிட்ட போலி செய்திகளுக்கு மத்தியில் மக்களும் அவர் இம்முறை விடுதலைப் பெறுவார் என்றே நினைத்திருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!