மகனைக் காப்பாற்ற முற்பட்ட தாய் அடித்துக் கொலை! – ஊரெழுவில் பயங்கரம்

யாழ்ப்பாணம், உரெழு மேற்கு சரஸ்வதி சன சமூக நிலைய பகுதியில் மகனைத் தாக்க முற்பட்டவர்களை தடுக்க முற்பட்ட தாய், பொல்லு மற்றும் கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நேற்றிரவு 08 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுக்குள் புகுந்த 08 பேர் கொண்ட கும்பலே இந்தக் கொலையைச் செய்துள்ளது. சந்திரராசா விஐயகுமாரி எனும் 58 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகனுக்கும் வேறு சிலருக்கும், வீதியில் பிரச்சினை ஏற்பட்டதாகவும், அதன் தொடர்ச்சியாகவே இந்த கொலை இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!