மொடல் அழகி கொலை: – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய கல்லூரி மாணவர் கைது

மும்பையை சேர்ந்த கால்டாக்சி டிரைவர் ஒருவர் தன் காரில் வந்த பயணி ஒருவர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர் போலீசாரிடம் கூறுகையில், அந்தேரி பகுதியில் இருந்து முசாமில் சையத் என்ற பயணி செல்போன் செயலி மூலம் என்னுடைய காரை பதிவு செய்து மும்பை விமான நிலையம் செல்ல வேண்டும் என ஒரு சூட்கேசுடன் வந்தார். விமான நிலையம் நோக்கி காரை ஓட்டிச்சென்ற போது திடீரென அவர் மலாடு பகுதிக்கு காரை திருப்புமாறு கூறினார். அங்குள்ள ஒரு புதரில் தான் கொண்டு வந்த சூட்கேசை தூக்கி வீசி விட்டு அவர் காரில் இருந்து இறங்கி ஓடி விட்டார் என்று தெரிவித்தார்.

இதனால் உஷாரான போலீசார் மலாடு பகுதிக்கு சென்று புதர் பகுதியில் சோதனை நடத்தினர். அங்கு கார் டிரைவர் அளித்த தகவலின்படி சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்த போது இளம்பெண் உடல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெண்ணின் முகம் கயிற்றாலும், உடல் படுக்கை விரிப்பாலும் சுற்றப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி சூட்கேசை தூக்கி வீசி சென்றது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபர் சிறிது தூரம் நடந்து சென்று ஆட்டோவில் செல்கிறார். சிறிது தூரம் சென்ற பிறகு ஆட்டோவில் இருந்து இறங்கி மீண்டும் வாடகை காரில் செல்கிறார். இந்த காட்சிகள் அங்குள்ள சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வாலிபர் முசாமில் சையத் (வயது 19) என போலீசார் உறுதி செய்தனர்.

டிரைவர் கொடுத்த தகவல் மூலம் அந்த வாலிபர் அந்தேரி பகுதியில் வசித்து வந்த வீட்டை போலீசார் கண்டறிந்தனர். அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், ஐதராபாத்தை சேர்ந்த அவர் மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருவதும், பிணமாக மீட்கப்பட்டவர் அவரது தோழியான மாடல் அழகி மான்சி தீக்சித் (20) என்பதும் தெரியவந்தது. மேலும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

மாடல் அழகி மான்சி தீக்சித் உடன் சமூக வலைத்தளம் மூலமாக முசாமில் சையத்துக்கு நட்பு ஏற்பட்டு உள்ளது. மான்சி தீக்சித் சில இந்தி படங்களில் சிறு வேடங்களில் நடித்து உள்ளார். சில குறும்படங்களிலும் நடித்து இருக்கிறார். சம்பவத்தன்று முசாமில் சையத் அழைப்பை ஏற்று அவருடைய வீட்டுக்கு மான்சி தீக்சித் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவர், மாடல் அழகியை இரும்பு நாற்காலியால் அடித்துள்ளார். மேலும் கயிற்றால் கழுத்தை நெரித்ததில் மான்சி தீக்சித் இறந்து விட்டார். இதனால் அவரது முகத்தை கயிற்றாலும், உடலை படுக்கை விரிப்பாலும் சுற்றி சூட்கேசில் அடைத்து மலாடு பகுதியில் முசாமில் சையத் வீசி சென்றுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து அவர் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!