இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் இல்லை – ஜனாதிபதி

இயற்கையின் ஆசீர்வாதமின்றி மனிதனுக்கு எதிர்காலம் கிடையாது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இன்று முற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா – 2018 மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது வாழ்வை நேசிக்கின்ற, பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்திக்கின்ற அனைவரும் இயற்கையை பாதுகாக்க வேண்டுமென்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். சுற்றாடலை பாதுகாப்பதற்காகவும் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காகவும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி வாழ்நாளில் அனைத்து நல்ல தருணங்களின்போதும் மரக்கன்று ஒன்றை நாட்டுவது பிரஜை ஒருவர் மனித இனத்தின் இருப்புக்காக மேற்கொள்ளும் முக்கியமானதொரு கடமையும் பொறுப்புமாகு மென்றும் குறிப்பிட்டார்.

சூழலை நேசிக்கும் பிரஜைகளை தேசிய மட்டத்தில் கௌரவிக்கும் ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா, சூழல் நேய கைத்தொழில் மற்றும் சேவைகளை வலுவூட்டும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சுற்றாடல்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கால இலங்கையில் “நீலப் பசுமை யுகம்” ஒன்றை உருவாக்குவதற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும். “ஸ்ரீ லங்கா நெக்ஸ்ட்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சுற்றாடல் கண்காட்சி, காலநிலை மாற்றம் தொடர்பான ஊடக சந்திப்பு, பாடசாலை மாணவர்களுக்கு அறிவூட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்கள், சமுத்திர சூழல் பற்றிய விசேட கலந்துரையாடல்கள், நீலப் பசுமை கிராமிய உரையாடல், காலநிலை மாற்றம் பற்றிய வர்த்தகத்துறை சந்திப்பு, பேண்தகு உற்பத்திகள் மற்றும் நுகர்வு பற்றிய தேசிய கருத்தாய்வு, வன ஆராய்ச்சி மாநாடு, காலநிலை பற்றிய பூகோள இளைஞர் அமைப்பின் சந்திப்பு, சமுத்திர சூழல் பற்றிய நான்காவது தேசிய நிபுணர்கள் மாநாடு, தேசிய மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இவ்வருட ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவுடன் இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றாடல் துறைக்கு சிறந்த பங்களிப்புகளை செய்த நிறுவனங்கள், கைத்தொழில்துறை மற்றும் சேவைகள், பாடசாலைகள், தனிநபர்கள், சிவில் நிறுவனங்கள், வர்த்தக துறையினர், ஊடகவியலாளர்களை கௌரவித்து ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

“ஸ்ரீ லங்கா நெக்ஸ்ட்” சுற்றாடல் கண்காட்சியை திறந்து வைத்த ஜனாதிபதி இந்த கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதுடன், பணிக்குழாமினருடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

ஜனாதிபதி சுற்றாடல் விருது விழா 2018 நினைவு மலர் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்ரம பெரேரா. தயா கமகே, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பிரதி அமைச்சர் அஜித் மான்னப்பெரும, மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மகாவலி அபிவிருத்தி சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சந்ரரத்ன பல்லேகம ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!