பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்த கொடூரம் – 5 பேர் கைது

திருவையாறு அருகே பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகள் தேவி(வயது 14). (இருவரது பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). ராஜா சொந்தமாக மாட்டு வண்டி வைத்துள்ளார். இதனால் அவர் மணல் ஏற்ற செல்லும்போது தனது மகள் தேவியையும் உடன் அழைத்து செல்வது வழக்கம். அப்போது மணல் ஏற்ற வந்த 16 வயது சிறுவன் ஒருவனுக்கும் தேவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனால் அந்த சிறுவன் தேவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அந்த சிறுவன், தேவியின் வீட்டுக்கு வந்து சென்றதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன் தேவியை அடித்து உதைத்து அவரது ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியதாக தெரிகிறது.

இதை அறிந்த தேவியின் தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரும் கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணனிடம் சென்று இது குறித்து கேட்டனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தேவியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டுக்கு சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி தனது தாயுடன் பேச அதே பகுதியில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம் செல்போனை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் மகேந்திரன் செல்போனை கொடுக்கவில்லை. இந்த நிலையில் மகேந்திரனின் செல்போன் திடீரென மாயமானது. இந்த செல்போனை தேவிதான் திருடி சென்று விட்டார் என கருதி மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த வித்யா, சிவக்குமார் ஆகியோர் சேர்ந்து தேவியை அங்கு உள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்ததுடன் அவரது உடலில் சூடு வைத்ததாக தெரிகிறது. இதில் தேவி மயங்கி விழுந்தார். உடனே மகேந்திரன் உள்ளிட்டோர் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்த தேவி தன்னை சுற்றி கட்டப்பட்டிருந்த கயிறை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து தப்பினார். பின்னர் அவர், திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருவையாறு அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகுணா அரசு மருத்துவமனைக்கு சென்று தேவியிடம் விசாரணை நடத்தினார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் என்ற கோபாலகிருஷ்ணன்(29), மகேந்திரன்(35), சிவக்குமார்(31), வித்யா(27), மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாலியல் தொல்லைக்குள்ளான சிறுமியை மரத்தில் கட்டி வைத்து சூடு வைத்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!