வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம்: – பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்

கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பயனாளர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி பயன்படுத்தியதாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் தேர்தல் பிரசார நிறுவனம் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பேஸ்புக் நிறுவனத்தின் மீது இங்கிலாந்து தகவல் ஆணையத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடிய விவகாரம் தொடர்பாக பேஸ்புக் நிறுவனத்துக்கு இங்கிலாந்து தகவல் ஆணையம் 4.70 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக இங்கிலாந்து தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பில், வாடிக்கையாளர்களின் தகவலை அவர்கள் அனுமதியின்றி பயன்படுத்திய குற்றச்சாட்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு இங்கிலாந்து தகவல் பயன்பாட்டுச் சட்ட விதிகளின் படி அதிகபட்ச அளவாக 4.70 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பல்வேறு செயல்களின் மூலமாக சேகரிக்கப்படும் தகவல்களானது, பயனாளர்களின் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தபட்டுள்ளது. இதன்மூலம் பயனாளர்களின் அந்தரங்கத் தகவல்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்து பேஸ்புக் நிறுவனம் தவறியுள்ளது. இந்த விவகாரம் பெரும் சர்சையைக் கிளப்பிய பின்னரும் 2018-ஆம் ஆண்டுவரை கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்தின் மூல நிறுவனமான எஸ்.சி.எல் நிறுவனம் பேஸ்புக் தளத்திலிருந்து நீக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது என தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!