தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார் விஜய் தினகரன்

சர்கார் படத்தின் மூலம் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை நடிகர் விஜய் வெளிகாட்டியிருக்கிறார் என்று அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி. டி. வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

சர்கார் அடிப்படையில் வியாபார நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். ஒருவேளை படத்தை உருவாக்கியவர்கள் இலவசப் பொருட்கள் மக்களுக்கு தேவையில்லாத ஒன்று என கருதினால் அவர்கள் அதனை முழுமையாக காட்டியிருக்கவேண்டும்.

இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டியையும், அதில் ஒட்டப்பட்டுள்ள படத்தையும் காட்டவேண்டியது தானே? அவர்கள் இலவச லெப்டொப், இலவச சைக்கிள் மற்றும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை என அனைத்தையும் அவர்கள் இவ்வாறு தான் கருதுவார்களா? இந்தியா ஒன்றும் முன்னேறிய நாடு அல்ல. வளர்ந்து வரும் நாடுதான் . எனவே இது மக்களுக்கு அவசியமான ஒன்று தான்.

அரசியலில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் அறிவு இவ்வளவு தான் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார். வறியவர்கள் மற்றும் வாழ்க்கை நிலையில் சிரமப்படுபவர்கள் குறித்தான அவரது புரிதல் எத்தகையது என்பது இதன் மூலம் தெரிகிறது. அப்படி கூறுபவர்களின் படம் 50 ரூபாய் டிக்கட்டானது, 2000 ரூபாயிற்கு விற்கப்படுகிறது. இதை விரும்புபவர்கள் வாங்குகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் என்ன முறையான வரி கட்டியா வாங்குகிறார்கள்? என கேள்வியெழுப்பியிருக்கிறார்.

முன்னதாக சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று தமிழக அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!