“ஜனாதிபதி மைத்திரி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டார்”

தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு சடுதியாக மஹிந்த ராஜபக்சவை நியமித்துள்ளமை இந்நாட்டின் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துள்ள செயலாகும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் குறிப்பிட்டார்.

சங்கத்தின் உயர்பீடக் கூட்டம் கல்முனை சணச மண்டபத்தில் இடம்பெற்றபோது அங்கு அவர் மேலும் பேசுகையில்,

இலங்கையில் உள்ள சிறுபான்மை சமூகங்கள் சார்ந்த கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடாமல் தான்தோன்றித் தனமான முறையில் ஜனாதிபதி மேற்கொண்ட செயலானது பாராளுமன்ற சனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வினை வழங்காது இழுத்தடிப்புச் செய்து இவ் விடயத்தை குழப்பகரமான சூழலுக்கு இட்டுச் சென்றுள்ள கைங்கரியத்தையும் ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார். இந்த வகையில் எக் காரணம் கொண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியின் கரத்தினை பலப்படுத்த ஒரு போதும் முனையக்கூடாது.

இன்று வடக்கு கிழக்கு இணைப்பை சாத்தியமாக்க மாட்டேன் என்றும் சிங்கள மக்களின் பேராதரவு தனக்கு அதிகம் உள்ளதாக ஜனாதிபதியும் அவர் சார்ந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் தம்பட்டம் அடிப்பது சர்வாதிகார போக்கின் வெட்டு முகமாகும். கடந்த மூன்றரை வருட காலம் நல்லாட்சி என்று கூறிக் கொண்டு சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது காலம் கடத்திய ஆட்சித் தலைவராகவே நாம் ஜனாதிபதியை பார்க்க வேண்டியுள்ளது.

ஜனநாயக வழிமுறையின் பிரகாரம் பிரதமர் ஒருவரை பதவி நீக்கம் செய்து விட்டு புதிதாக ஒருவரை பிரதமராக நியமித்திருந்தால் அதனை நாம் வரவேற்போம். மாறாக இரவோடு இரவாக ஒரு பிரதமர் பதவியிருக்கும் வேளையில் புதிதாக ஒருவரை பிரதமராக நியமித்துள்ளமை இலங்கையின் ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கியுள்ளது.

எனவே இந் நாட்டில் உள்ள ஜனநாகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அரசியல் கட்சியின் தலைவர்கள் அனைவரும் இந்த சனநாயக விரோத செயலுக்கு எதிர்வரும் 14ஆம் திகதி சாட்டையடி கொடுக்க வேண்டும் என்று இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!