மைத்திரியைச் சந்திக்கும் முடிவை மாற்றியது ஐதேக – குழப்பநிலை தீவிரம்

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளதை அடுத்து, சிறிலங்கா அரசியல் குழப்பங்கள் மேலும் மோசமடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐதேக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட, பிரேரணைக்கு ஆதரவளித்த கட்சிகளின் தலைவர்களை சந்திக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்தார்.

இன்று காலை 8.30 மணிக்கு, ஐதேகவினரை சந்திப்பதற்கு சிறிலங்கா அதிபர் அழைப்பு விடுத்திருந்தார். அதனை ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும், உறுதி செய்திருந்தார்.

ஆனால், நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதை அடுத்து, நிலைமைகள் மேலும் குழப்பமடைந்துள்ளன.

சிறிலங்கா அதிபரின் அழைப்பின் பேரில் இன்று காலை அவருடன் நடத்தவிருந்த சந்திப்பை நிறுத்தியுள்ளதாகவும், அவரைத் தாம் சந்திக்கச் செல்லமாட்டோம் என்றும் ராஜித சேனாரத்ன நேற்றிரவு தெரிவித்துள்ளார்.

இதனால், தற்போதைய குழப்பங்களுக்கு முடிவு கட்டும் முயற்சிகளில் மேலும் சிக்கலடைந்துள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!