வாக்கி டாக்கியில் விடுமுறை கேட்ட போலீஸ்காரர்- உயர் அதிகாரிகள் அதிர்ச்சி

தேனாம்பேட்டையில் போலீஸ்காரர் ஒருவர் வாக்கி டாக்கியில் விடுமுறை கேட்ட சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு போக்குவரத்து போலீசார் மற்றும் உயர் அதிகாரிகளின் பயன்பாட்டில் உள்ள வாக்கி டாக்கியில் வழக்கத்துக்கு மாறாக போலீஸ்காரர் ஒருவர் பேசுவது எதிரொலித்தது.

எப்போதும் உயர் போலீஸ் அதிகாரிகள் வாக்கி டாக்கியில் உத்தரவை பிறப்பிப்பார்கள். இதனை பணியில் இருக்கும் போலீசார் ஆமோதிப்பார்கள். ஆனால் நேற்று வாக்கி டாக்கியில் பேசிய போலீஸ்காரரோ தனக்கு தனது மேல் அதிகாரி விடுமுறை தர மறுக்கிறார் என்று கதறினார்.

எனது தாயின் சாவுக்கு கூட விடுமுறை தர மறுக்கிறார்களே என்று அவர் ஆதங்கப்பட்டார். இதனை கேட்டு உயர் போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பிட்ட போலீஸ்காரர் விடுமுறை கிடைக்காத விரக்தியின் விளிம்பில் அதுபோன்று வாக்கி டாக்கியில் பேசியது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் எங்கு இருக்கிறார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது.

இதில் தேனாம்பேட்டையில் உள்ள பிரபல ஓட்டல் ஒன்றின் அருகில் இருந்தே போலீஸ்காரர் வாக்கி டாக்கியில் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகள் விசாரணையும் நடத்தி வருகிறார்கள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!