3 வருடங்கள் சிறைத்தண்டனையை சபாநாயகர் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும் : காரணம் கூறும் கம்மன்பில

அரசாங்கத்தினையோ, அமைச்சரவையினையோ சபாநாயகரால் ஏற்றுக்கொள்ள முடியாது எனின், எம்மாலும் அவரை சபாநாயகராக ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு முன்னெடுக்கப்படபோது வாய்மூலமாக வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு பெரும்பான்மை இல்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார்.

எனினும் அன்றைய தினத்திற்குரிய ஹன்சார்ட் அறிக்கையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது என்ற வாக்கியம் சேர்க்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இடம்பெறாத ஒருவிடயம் ஹன்சார்ட் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற சட்டங்களின்படி இக்குற்றத்திற்கு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும். எனவே விரைவில் சிறை செல்வதற்கு தயாராகுமாறு சபாநாயகரைக் கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வுகளைப் புறக்கணித்த பின்னர், இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!