தொடரும் நாய்க்கறி பீதி – சென்னை கொண்டு வரப்பட்ட வால் நீளமான ஆடுகள்

ஆட்டு இறைச்சி தொடர்பாக மக்கள் மத்தியில் நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே தென்சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார்.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் கடந்த 17-ந்தேதி நாய் போன்ற தோற்றத்தில் நீண்ட வாலுடன் கூடிய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து இந்த இறைச்சி அனுப்பப்பட்டது தெரிய வந்தது. பெரிய பார்சல்களாக அட்டைப் பெட்டியில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த 2190 கிலோ இறைச்சியை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அது கெட்டுப்போன நாய்க்கறி என்று பரபரப்பான தகவல் பரவியது.

இதனையடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் காரசாரமாக கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதனால் சென்னையில் வசிக்கும் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். இத்தனை நாட்களாக நாம் சாப்பிட்டது நாய்க்கறி தானோ? என்கிற கேள்வியும் அவர்கள் மனதில் தோன்றியது.

இதன் காரணமாக சென்னையில் உள்ள பெரும்பாலான அசைவ ஓட்டல்களில் வியாபாரம் குறைந்தது. பிரியாணி, மட்டன் கறி சாப்பிடுவதை அசைவ பிரியர்கள் தவிர்த்தனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்டது நாய்க்கறியா? ஆட்டுக்கறியா? என்கிற விவாதங்கள் சூடாகிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் 6 நாட்களுக்கு பிறகு நாய்க்கறி பீதியை அடக்கும் வகையில் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

எழும்பூர் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது, நாய்க்கறி இல்லை. அது ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் நிலவும் நாய்க்கறி பீதியை முற்றிலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தென் சென்னை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரான தமிழ்செல்வன் இதற்காக ஜோத்பூரில் இருந்து வால் நீளமான ஆடுகளை சென்னை கொண்டு வந்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, மக்கள் மத்தியில் ஆட்டு இறைச்சி தொடர்பாக நிலவும் சந்தேகங்களை தெளிவுபடுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வெளி மாநிலங்களில் இருந்து இறைச்சியை பதப்படுத்திய முறையில்தான் கொண்டு வர வேண்டும் என்றும், சாதாரண பார்சல்களை போல கொண்டு வரக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழ்செல்வன் கூறினார்.

சென்னையில் உள்ள கறிக்கடைகளிலும், ஓட்டல்களிலும் வெளி மாநில ஆடுகளே அதிக அளவில் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. ஜோத்பூரில் 1 கிலோ ஆட்டுக்கறியின் விலை ரூ.300-லிருந்து 350 ரூபாய் வரையிலேயே உள்ளது. அதனை அங்கிருந்து வாங்கித்தான் வியாபாரிகள் இங்கு கிலோ ரூ.600-க்கு விற்பனை செய்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து ஆட்டிறைச்சியை கொண்டு வருவதற்காக சில வழிமுறைகள் உள்ளன. ஆட்டை வெட்டியவுடன் நன்றாக கழுவி அது கெட்டுப்போவதற்கு முன்பே ஐஸ் பெட்டியில் வைத்து முழுக்க முழுக்க குளிர்சாதன வசதியுடன் கூடிய கண்டெய்னரில்தான் எடுத்து வர வேண்டும் என்று விதி உள்ளது. இதனை இனிமேலாவது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

இப்படி எவ்வளவுதான் விளக்கங்கள் கொடுத்தாலும் நாய்க்கறி பீதியில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்கு மேலும் நாட்கள் ஆகும் என்றே தெரிகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!