தடைகளை விதிக்கும் முடிவை இன்னமும் எடுக்கவில்லை – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் உள்ள தனி நபர்களை வைத்து தடைகளை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அண்மைய அரசியல் குழப்பங்களுக்கு காரணமான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சில மேற்குலக நாடுகள் தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

எனினும், இத்தகைய எந்த நகர்வும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என்றும், இதுபற்றிய கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை என்றும், ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள், கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றிடம் தெரிவித்துள்ளன.

கடந்த மாதம் 26ஆம் நாள் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்று வரும் பல்வேறு மாற்றங்களால் ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டிருப்பதுடன், சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயக நடைமுறைகளையும், அரசியலமைப்பையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஏனைய பல நாடுகளுடன் இணைந்து, கோரிக்கைகளை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!