மட்டக்களப்பு துயிலுமில்லங்களில் பிடுங்கி அகற்றப்பட்ட நடுகற்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள, வாகரை மற்றும் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லங்களில், நாட்டப்பட்ட நடுகற்கள், சிறிலங்கா காவல்துறையினரின் உத்தரவின் பேரில், நேற்று மாலை பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நாளான இன்று மாலை, துயிலுமில்லங்களில் ஈகச்சுடர் ஏற்றுவதற்காக, புதிதாக நடுகற்கள் நாட்டப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று மாலை அங்கு சென்ற சிறிலங்கா காவல்துறையினர், துயிலுமில்லங்களில் நாட்டப்பட்டுள்ள நடுகற்களை அகற்றாவிடின், நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெறப்படும் என்று, எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, இரண்டு துயிலுமில்லங்களிலும் நாட்டப்பட்டிருந்த, 120இற்கும் அதிகமான நடுகற்கள், நேற்று மாலை பிடுங்கி அகற்றப்பட்டன.

அதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று விடுத்த உத்தரவில், விடுதலைப் புலிகளின் சின்னம், கொடி, பாடல்களை பயன்படுத்தாமல், நினைவுகூரல் நிகழ்வை நடத்த முடியும் என, கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!