தென்சீனக் கடல்பரப்பில் ஆஸ்திரேலியக் கப்பல்களை சீனா வழிமறித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்சீனக் கடல் பரப்பு முழுவதையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு வியட்நாம், பிலிப்பைன்ஸ் நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
பன்னாட்டுத் தீர்ப்பாயத்தில் இது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதில் தென்சீனக் கடல் பரப்பில் சீனாவுக்கு உரிமை இல்லை என்று தீர்ப்பு வெளியானது.
எனினும் இந்தத் தீர்ப்பை புறந்தள்ளி தென்சீனக் கடல் பரப்ரை அடாத்தாக ஆக்கிரமித்து வைத்துள்ளது சீனா. தென்சீனக் கடல் பகுதி பன்னாட்டுப் போக்குவரத்துக்கு உரித்தான பகுதி என்று அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும், குறித்த பகுதியில் அவ்வப்போது கண்காணிப்பில் ஈடுபடுவதும், அந்த வழியால் வரும் கப்பல்களை இடைமறிப்பதும் சீனாவின் வழக்கமாகவே மாறிவிட்டது. அவ்வாறாக வியட்நாமுக்குச் சென்ற ஆஸ்திரேலியாவின் இரண்டு போர்க் கப்பல் ஓர் எண்ணெய்க் கப்பலை சீனா நேற்றுமுன்தினம் இடைமறித்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் சிறு பதற்றம் ஏற்பட்டு மறைந்தது.
‘‘மூன்று கப்பல்களும் பத்திரமாக வியட்நாம் சென்றுள்ளன. தென்சீனக் கடலின் பன்னாட்டு எல்லையில் ஆஸ்திரேலிய போர்க் கப்பல்கள் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபடும். எத்தகைய அச்சுறுத்தல்களும் அஞ்ச மாட்டோம்’’ என்று ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!