“அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா”

வடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற்கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

வடமாகாண ஆசிரியர்கள் திருமணம் மற்றும் வெளிநாட்டு பயணங்களுக்காக மூன்று மாத விடுமுறையினை பெற்றுக்கொள்கின்றார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிப்படைகின்றது. இந்த பாதிப்புக்கு நானும் ஒரு காரணமாகின்றேன்.

ஏன் எனில் ஆசிரியர்களுக்கு விடுமுறைக்கான அனுமதி வழங்குபவன் நானே. அதிபர்கள், வலய கல்விப்பணிப்பாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் விடுமுறைக்கு அனுமதி வழங்கி இறுதியில் என்னிடம் அனுப்புகின்றார்கள். அதில் நான் கையொப்பம் இடுகின்றேன். எவ்வாறு 3 மாத காலத்திற்கு விடுமுறை வழங்குகின்றார்களோ என எனக்கு தெரியாது. இது தொடர்பில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றேன்.

நான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்தி அவர்களுக்கு தங்கப் பதங்களை வழங்கியிருந்தேன். சிறந்த சேவை ஆற்றுபவர்களை இது போன்று பாராட்டி ஊக்குவிப்பது எமது கடமை ஆனால் வடமாகாணத்தில் அதிகளவில் விடுமுறை எடுக்காது சேவையாற்றும் ஆசிரியர்களை பாராட்டுவதற்கு திட்டம் ஒன்றினை சரிக்கட்ட வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் வலிகாமம் வலயகல்வி அலுவலகம் நடத்திய ஆசிரியர் கௌரவிப்பு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாகாண கல்வி பணிப்பாளர் உதயகுமார் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!