நாடு பிளவுப்பட போகின்றது, பெரும்பான்மை இன மக்கள் ஒன்றிணைய வேண்டும் – மஹிந்தானந்த

விடுதலை புலிகள் அமைப்பின் முகவர்களாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர். தமது அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்ள ஐக்கிய தேசிய கட்சியினர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் குறுகிய நோங்களை நிறைவேற்ற ஒப்புதல் தெரிவித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றால் நிச்சயம் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உருவாக்கப்படும். பெரும்பான்மை மக்கள் ஒன்றினைந்து யுத்தத்தை வெற்றிக் கொண்டதை போல தற்போதைய அரசியல் நெருக்கடிகளையும் தேர்தலினால் ஒன்றிணைந்து வெற்றிக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பொதுஜன பெரமுனவின் கட்சி தலைமையகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகிவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

மேற்குலத்தவர்களுக்கும், புலம் பெயர் விடுதலை புலிகளின் அமைப்பினருக்கும் 2015ம் ஆண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளவே இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அவரது தரப்பினர்கள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தற்போது ஐக்கிய தேசிய கட்சியினரை பாதுகாக்கவும், அவர்களுக்கு ஆட்சியினை மீண்டும் பெற்று; கொடுக்க பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி மீண்டும் தோற்றம் பெற்றாலே தங்களின் நோக்கங்கள் நிறைவேறும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்.

கடந்த மூன்று வருட காலமாக அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கில் இடம்பெற்ற நிகழ்வுகளுக்கு கடந்த ஒரு மாத காலத்தில் தடையேற்பட்டமையினையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.

நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பினை உருவாக்கி தருகின்றோம் என்று ஐக்கிய தேசிய கட்சியினர் மேற்குலக நாடுகளுக்கும், புலம் பெயர் விடுதலை புலிகளின் அமைப்பினருக்கும் வாக்குறுதி வழங்கியுள்ளது. இவர்களின் முகவர்களாகவே எதிர் கட்சி என்ற பெயரில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

இதற்காகவே இவர்கள் இன்று ஜனநாயகம் பற்றி போலி கண்ணீர் வடிக்கின்றனர்.

ஐக்கிய தேசிய கட்சியினர் மீண்டும் ஆட்சியமைத்தால் நிச்சயம் நாட்டை பிரிக்கும் அரசியலமைப்பு உட்பட பல விடயங்கள் அரசியலமைப்பின் ஊடாகவே நிறைவேற்றப்படும்.

பல உயிர் தியாகங்களை செய்த இராணுவத்தினரது தியாகங்கள் அனைத்தும் அர்த்தமற்றதாகி விடும் ஆகவே எவ்வாறு பெரும்பான்மை மக்கள் அனைவரும் ஒன்றினைந்து பயங்கரவாத யுத்தத்தை வெற்றிக் கொண்டோமோ அதே போன்று இன்றும் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றினைந்து தேர்தலின் ஊடாக எதிர் தரப்பின் சூழ்ச்சிகளை வெற்றிக் கொள்ள வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!