இழுத்து மூடப்படுகிறது ஈபிள் கோபுரம்: பிரான்ஸ் வன்முறை.

பிரான்சில் நடைபெற்று வரும் அரசுக்கெதிரான “மஞ்சள் ஜாக்கெட்” என்னும் போராட்டம் மேலும் தீவிரமாகும் என்ற அச்சத்துக்கிடையில் நாளை (சனிக்கிழமை) ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் முழுவதும் 89,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், தலைநகர் பாரீஸில் ராணுவ வாகனங்கள் நிறுத்தப்படும் என்றும் அந்நாட்டு பிரதமர் எய்ட்வார் ஃபிலிப் அறிவித்துள்ளார்.

மேலும், பாரீஸின் சேம்ப்ஸ்-எலைசீஸ் பகுதியிலுள்ள கடைகள் மற்றும் உணவகங்களை மூடுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். சில அருங்காட்சியகங்களும் மூடப்படும். கடந்த பல தசாப்தகாலங்களில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான வன்முறை கடந்த சனிக்கிழமையன்று பாரீஸில் நடைபெற்றது.

பிரான்ஸ் போராட்டம் : எரிபொருள் விலை உயர்வை கைவிட்ட அரசு. பிரான்ஸ் வன்முறை: “போராட்டக்காரர்கள் வெட்கப்பட வேண்டும்” – அதிபர் மக்ரோங் மக்களின் வன்முறை போராட்டத்துக்கு காரணமான எரிபொருள் உயர்வை திரும்ப பெறுவதற்கு பிரான்ஸ் அரசாங்கம் ஒப்புக்கொள்வதாக அறிவித்துவிட்டாலும், இதுபோன்ற மற்ற விவகாரங்களில் அரசாங்கத்தின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக மக்களின் போராட்டம் தொடர்கிறது.

என்ன சொல்கிறது பிரான்ஸ் அரசு? ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், பிரான்ஸின் தீவிர வலதுசாரி, தீவிர இடதுசாரியை சேர்ந்தவர்களும் இணைந்து சனிக்கிழமையன்று தலைநகர் பாரீஸில் பெரியளவில் வன்முறையை கட்டவிழ்த்துவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டு தொலைக்காட்சியான TF1-இடம் பேசிய பிரதமர் பிலிப், பாரீஸில் மட்டும் 8,000 காவல்துறையினரும், பல ராணுவ வாகனங்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக போராட்டக்கார்களின் மற்ற முக்கிய கோரிக்கைகளுக்கு உதவ தயாராக இருப்பதாக அந்நாட்டின் செனட் சபையில் தெரிவித்திருந்த ஃபிலிப், தற்போது போராட்டக்காரர்களுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

பாரீஸ் எவ்வாறு பாதிக்கப்படும்? சனிக்கிழமை நடைபெறும் வன்முறை போராட்டங்கள் குறித்து எழுந்துள்ள அச்சுறுத்தலின் காரணமாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஈபிள் கோபுரம் மூடப்படவுள்ளதாக அதன் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற போராட்டத்தின்போது பிரான்ஸின் புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்றான ‘ஆர் டி ட்ரோம்ஃப்’ சேதப்படுத்தப்பட்டபின் மற்ற இடங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கால் கை இல்லாமல் பிறக்கும் குழந்தைகள் – விசாரணையை முடுக்கிய பிரான்ஸ் ‘அவசர நிலை பிரகடனம்?’: பிரான்சில் நடப்பது இதுதான் “அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிந்தும் துணிந்து செயல்பட முடியாது” என்று ஆர்.டி.எல் என்னும் வானொலியில் பேசிய அந்நாட்டின் கலாசாரத்துறை அமைச்சர் பிராங்க் ரிஸ்ட்டர் தெரிவித்துள்ளார்.

போராட்டத்துக்கு என்ன காரணம்? பிரான்ஸ் கார்களின் முக்கிய எரிபொருளான டீசலின் விலை, ஒரு லிட்டருக்கு சராசரியாக 1.24 யூரோ முதல் 1.53 யூரோ வரை உயர்ந்து, கடந்த 12 மாதங்களில் 23 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதே இந்த போராட்டத்துக்கு காரணம். 2000களின் தொடக்கங்களிலிருந்து எரிபொருள் விலை இத்தனை உயர்வை காண்பது இதுவே முதல்முறை. உலகளவில் எண்ணெயின் விலை உயர்ந்தாலும், எண்ணெய் மற்றும் எரிவாயுக்கள் மீதான வரியை மக்ரோங் அரசு உயர்த்தியுள்ளது. இது 2019ஆம் ஆண்டு மேலும் உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான முதலீடுகளுக்கு நிதி தேவைப்படுவதால் எரிபொருள் மீது அதிகப்படியான வரி விதிக்கப்படுவதாக மக்ரோங் தெரிவித்தார்.

அது என்ன `மஞ்சள் ஜாக்கெட்` இயக்கம்? பிரான்ஸில் கார்கள் பழுதாகிபோனால் பயன்படுத்துவதற்கு வைத்திருக்கப்படும் பாதுகாப்பு கருவிகளுடன் ஓட்டுநர்கள் மஞ்சள் ஜாக்கெட்டுகளையும் வைத்திருக்க வேண்டும். சிவப்பு நிறத்தில் முக்கொம்பு வடிவ தடுப்பு, வண்டி சாலையில் பழுதடைந்தால் வைக்கப்படுவதை போல் ஓட்டுநர்கள் இந்த மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிந்திருக்க வேண்டும். இது தொலைதூரத்தில் வருபவர்களுக்கு தெளிவாக தெரியக்கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும். மஞ்சள் ஜாக்கெட்டுகளை அணிய தவறினால் அபராதம் விதிக்கப்படும் சட்டம் 2008ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!