11 பேர் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – 2 கடற்படையினர் கைது

கொழும்பில் 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, மேலும் இரண்டு சிறிலங்கா கடற்படையினர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உபுல் மகேந்திர என்ற கடற்படை சிப்பாயும், சீவ் பெற்றி ஒவ்விசர் ஏ.பி.சேனநாயக்க என்ற இளநிலை அதிகாரியுமே நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கடற்படைத் தலைமையகத்தில் பணியாற்றுகிறார். மற்றவர் ஓய்வுபெற்று விட்டார் என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட கடற்படையினரில் ஒருவர், காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் பெற்றோரிடம் இருந்து, அவரை விடுவிப்பதாக கூறி 5 இலட்சம் ரூபாவை கப்பமாக பெற்றுக் கொண்டிருந்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மற்றவர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரை தொலைபேசி மூலம் அச்சுறுத்தினார் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!