அரசியல் நெருக்கடி சர்வதேசத்தில் இலங்கைக்கு தாக்கம் செலுத்தியது – சம்பிக்க ரணவக்க

நாட்டில் கடந்த 51 நாட்களாக இடம் பெற்ற அரசியல் நெருக்கடி சர்வதேச அரங்கில் தாக்கம் செலுத்தியது. பல பாரிய அபிவிருத்திகளுக்கு சர்வதேசமே தடையினை விதித்தது. கடந்த அரசாங்கத்தில் இழுப்பறி நிலையில் காணப்பட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை நாங்கள் குறுகிய காலத்திற்குள் முழுமைப்படுத்தினோம். என பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பாரிய அபிவிருத்திகள் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் பொறுப்புக்களை இன்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியல் சூழ்ச்சிகளை நாங்கள் கடந்த 51 நாட்களாக பாரிய போராட்டத்தின் மத்தியில் போராடி தற்போது பெற்றுள்ளோம். மீண்டும் பாரிய நகர அபிவிருத்தி மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு கிடைத்துள்ளமை மகிழ்ச்சிக்குரியது. அரசியல் நெருக்கடியின் காரணமாக பல அபிவிருத்திகள் இன்று தடைப்பட்டுள்ளது. சர்வதேசத்தின் ஆதரவு இல்லாமல் ஒருபோதும் தனித்து செயற்பட முடியாது.

அரசியலமைப்பிற்கு முரணாக அரசாங்கத்தை அமைத்து ஒரு திட்டத்தை நீக்கி எரிபொருளின் விலையினை குறைத்தால் மக்களின் நன்மதிப்பினை பெற்று விட முடியாது. நாட்டு மக்கள் தற்போது அரசியல் ரீதியில் தெளிவான நிலைப்பாட்டிலே உள்ளார்கள். எவரும் கீழ்த்தரமாக விலைபோகமாட்டார்கள் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!