முன்னாள் அயலுறவு அமைச்சர் மங்கள சமரவீர, யாரிடம் கேட்டு பன்னாட்டு நீதிபதி களை உள்ளடக்கிய ஜெனிவாப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கினார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ரணில் எதிர்ப்புக் குழுவின் முக்கியஸ்தரான தயாசிறி ஜயசேகர கேள்வி எழுப்பியிருக்கிறார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் அண்மையில் அரசலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் அரசதலைவர் இல்லத்தில் நடைபெற்றது. அங்கு தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினதும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும் கொள்கைகள் வேறுபட்டவை. எனவே தொடர்ந்து தேசிய அரசு பயணிக்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய அரசு அமைப்பதாக அரசததலைவர் வாக்குறுதியளித்தார்.
ஆனால் அந்தத் தேர்தலில் அந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததால் இறுதியில் தேசிய அரசு அமைக்கப்பட்டது. அந்தத் தேசிய அர சில் ஐக்கிய தேசியக் கட்சி தனக்கேற்ற வகையிலேயே செயற்பட்டது. குறிப்பாகப் பன்னாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய ஜெனிவாத் தீர்மானத்துக்கு அப்போதைய அயலுறவு அமைச்சர் மங்களசமரவீர தான் தோன்றித்தனமாகவே இணக்கம் வெளியிட்டார். அரசதலைவரிடம்கூட அவர் கேட்கவில்லை.
அதேபோன்று அம்பாந்தோட்டை த் துறைமுக விவகாரத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் கைகளே ஓங்கின. எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுக்கு வழங்கும் யோசனைகளையும் நாம் எதிர்த்தோம். கொழும்புத்துறைமுகத்தின் தெற்கு இறங்கு துறைமுக விவகாரத்திலும் சிக்கல் ஏற்பட்டது.
அத்துடன் தனியார் மயப்படுத்தல் தொடர்பில் சுதந்திரக்கட்சியின் கொள்கை என்ன? ஐக்கிய தேசியக் கட்சியுடன் நாம் இந்த விடயத்தில் நெருங்கவும் முடியாது. பொருளாதார தீர்மானங்களை ஐக்கிய தேசியக் கட்சியே எடுத்தது.
வரவு, செலவுத் திட்டங்களில் எமது யோசனைகள் உள்ளடக்கப்படவில்லை. அத்துடன் நிறைவேற்று அதிகார அரசதலைவர் முறைமையை மாற்றி அமைப்பது தொடர்பில் எமது கொள்கைக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைக்கும் வித்தியாசம் உள்ளது. எனவே தொடர்ந்தும் எம்மால் தேசிய அரசில் பயணிக்க முடியாது. அதனால் தான் நாங்கள் தேசிய அரசிலிருந்து விலகுகின்றோம்.
தேசிய அரசில் நீடிக்க விரும்புகின்றவர்கள் அதில் நீடிக்கலாம். ஆனால் விரைவில் சுதந்திரக்கட்சி தேசிய அரசிலிருந்து வெளியேறவேண்டும். அடுத்த மையக் குழுக்கூட்டத்தில் இது தொடர்பில் முடிவெடுக்கவேண்டும். அதாவது சிறிலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து எப்போது விலகும் என்ற முடிவை அடுத்த மையக் குழுக் கூட்டத்தில் எடுக்க வேண்டியது அவசியம் – – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!