பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட வாலிபர் உயிரிழப்பு – பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை.

மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டம், கிழக்கு டோம்பிவில்லி அருகேயுள்ள யஷ்வந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் துஷார் புஜாரே(27). வீட்டுக் கடன் வாங்கித்தரும் ஆலோசகராக பணியாற்றிவந்த துஷாருக்கு அப்பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. திருமணமாகி 21 வயது மகள் மற்றும் 15 வயதில் ஒரு மகன் என இரு பிள்ளைகளுக்கு தாயான அந்தப் பெண்ணின் மீது மோகம் கொண்ட துஷார், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரை தொல்லைப்படுத்த ஆரம்பித்தார். ஒருகட்டத்தில் அந்த பெண்ணின் கணவரிடமே தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இதனால் துஷாருக்கும் தனது மனைவிக்கும் கள்ளத்தொடர்பு இருக்கலாம் என்று அவர் சந்தேகிக்க ஆரம்பித்தார். இதைதொடர்ந்து, அவர்களின் குடும்பத்தில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டது. தனது நிம்மதியை கெடுத்த துஷாருக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று எண்ணிய அந்தப் பெண், இரு நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டார். வீட்டுக்கடன் தொடர்பாக பேச வேண்டும் எனகூறி நன்டவலி ஹில் பகுதிக்கு துஷாரை வரவழைத்தார்.

கடந்த 25-ம் தேதி ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள நன்டவலி ஹில் பகுதியில் தனது நண்பர்கள் பிரதிகா கெனியா மற்றும் தேஜாஸ் மாட்ரே ஆகியோருடன் அந்தப் பெண்ணும் காத்திருந்தார். இரவு 9 மணியளவில் துஷார் அங்கு வந்து சேர்ந்தார். அப்போது பிரதிகா கெனியா, தேஜாஸ் மாட்ரே ஆகியோர் சேர்ந்துகொண்டு அவரை பலமாக தாக்கினர். சற்றும் எதிர்பாராத நிலையில் கத்தியை எடுத்த அந்தப் பெண் துஷாரின் பிறப்புறுப்பை வெட்டி துண்டித்தார்.

வேதனையால் துடித்து அலறிய துஷாரை கிழக்கு டோம்விலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மூன்று பேரும் அழைத்துவந்து சேர்த்தனர். பின்னர், அவர்கள் தலைமறைவாகி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் விரைந்துவந்த போலீசார், துஷார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர்.

இதற்கிடையில், மேல்சிகிச்சைக்காக ஜே ஜே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட துஷார் புஜாரே சிகிச்சை பலனின்றி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!