சீனாவில் சனத்தொகை குறைய ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ திட்டமே காரணம்.

சர்வதேச ரீதியாக மிக அதிகமான சனத்தொகையை கொண்ட நாடாக சீனா இருந்து வருவதுடன், கடந்த பல வருடங்களாக ஏறக்குறைய 140 கோடி மக்கள் தொகையுடனேயே தொடர்ந்து நீடிக்கின்றது. இந்த நீடிப்புக்கு ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’ என்ற குடும்ப கட்டுப்பாடு திட்டமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 1979ஆம் ஆண்டு தொடக்கம் மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதையும் மீறி ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் அதிக அளவு அபராதம் விதிக்கப்பட்டது. அதற்கும் மேலதிகமாக கட்டாய கருக்கலைப்பு செய்யப்பட்டது. இதனால் அச்சம் அடைந்த மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெறாமல் கட்டுப்பாட்டுடன் குடும்பத்தை நடத்த ஆரம்பித்து விட்டனர்.

இதனால் சீனாவில் வழக்கத்தை விட சனத்தொகை பெருக்கம் குறைந்து விட்டது. சீனாவில் கடந்த ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பு நடந்தது. அதில் தேசிய அளவில் வருடாவருடம் 25 லட்சம் என்ற அளவில் சனத்தொகை குறைந்து வந்தமை தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சீன வம்சாவளி ஆராய்ச்சியாளர் யி புஸியான் நடத்திய ஆய்வில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன. ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற அதிரடி திட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் ஆண்டுக்கு 7 லட்சத்து 90 ஆயிரம் என்ற விகிதத்தில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வந்தது.

குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை வலுவாக அமுல்படுத்தியதன் மூலம் 70 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளது. 2018ஆம் ஆண்டின் சனத் தொகை கணக்கெடுப்பின் படி சீனாவில் இறப்பு விகிதம் 1 கோடியே 15 லட்சத்து 80 ஆயிரம் ஆக இருந்தது. அதேநேரம் பிறப்பு விகிதம் 12 லட்சத்து 70 ஆயிரமாக மிகவும் குறைந்துள்ளது.

இது போன்று பெருமளவில் மக்கள் தொகை குறைந்து வருவது சீனாவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.ஏனெனில் சனத் தொகை குறைவதன் மூலம் மனித உழைப்பும் குறையும் என்று அந்த ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து ஓய்வூதியம் மற்றும் சுகாதார மேம்பாடு போன்றவற்றின் தேவையும் அதிகரிக்கும்.

நாட்டின் சமூக வளர்ச்சி பணியில் 7 பேர் பணியாற்றி வரும் சூழ்நிலையில் மக்கள் தொகை குறைந்ததன் காரணமாக 2030ம் ஆண்டில் அது 4 பேர் என்ற அளவில் குறையும்” என்று யி புஸியான் தெரிவித்துள்ளார்.இதை ஏற்கனவே அறிந்த சீன அரசு குடும்பத்துக்கு 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கியது. இருந்த போதும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை என்பதே உண்மையான நிலவரம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!