கஞ்சா கடத்தியவரை காப்பாற்றினாரா சுமந்திரன்?

செம்பியன்பற்று பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால், ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-

செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த 4 ஆம் திகதி ஓர் நிகழ்விற்கு செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் 3 ஆம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக நடமாடியுள்ளனர். அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிசார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிசார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத் துப்பாக்கிகளை கான்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியை காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர். இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமிற்கும் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப்பிடித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிசார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர். இருப்பினும் பளைப் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பளைப் பொலிசாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிசார் சீருடைப் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிசார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மை தாக்கியதாகவும் தாம் விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிசார் எனப் பளை பொலிசாரிடம் தெரிவித்தனர். இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்கு கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன். இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஓர் தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. என்று தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!