டாக்டர் ரிச்சர்டு பீலே – “ஜெயலலிதா வெளிநாட்டில் சிகிச்சை பெற விரும்பவில்லை”

ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதாவை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்து செல்லாதது குறித்தும், ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படாதது குறித்தும் பல்வேறு முரண்பட்ட தகவல்களை டாக்டர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வாக்குமூலமாக அளித்துள்ளனர். இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்டு பீலே, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக பேசியபோது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஜெயலலிதாவிற்கு அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக ஒருவரிடம் ரிச்சர்டு பீலே கூறுகிறார்.

மேலும் அந்த வீடியோவில், ‘ஜெயலலிதாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறினோம். ஆனால், ஜெயலலிதா அறுவை சிகிச்சை வேண்டாம் என்று கூறினார். ஜெயலலிதா மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்ல விரும்பவில்லை.

ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் இருந்ததால் 2016-ம் ஆண்டு நவம்பர் 2-ந்தேதிக்கு பிறகு என்னை அழைக்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஜெயலலிதாவிற்கு முடிந்த அளவு சிறப்பான சிகிச்சை அளித்தது என்றும் கூறுகிறார். ரிச்சர்டு பீலே பேசும் வீடியோவை தற்போது வெளியிட்டது யார்? என்று தெரியவில்லை. இந்த வீடியோ வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!