கொலைகள் அதிகரிக்கும் மாவட்டமாக கொழும்பு மாறியுள்ளது – டக்ளஸ்

????????????????????????????????????
இலங்கையைப் பொறுத்தவரையில், தென் பகுதியிலே மிக அதிகளவிலான பாதாள உலக குழுக்களிடையே பல கொலைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த பாதாள உலக குழுக்களின் முக்கிய தலைவர் சிலர் டுபாய் நாட்டிலேயே மறைந்திருப்பதாக தென்பகுதி ஊடகங்கள் அடிக்கடித் தெரிவித்து வருகின்றன.

அதேபோன்று, இலங்கையில் அதிகளவிலான போதைப் பொருள் வர்த்தகத்திலும் இந்த குழுக்களுக்கு பாரிய பங்களிப்புகள் இருப்பதாகவே ஊடகங்கள் வாயிலாகத் தெரிய வருகின்றன.

அந்தவகையில் இந்த மீள ஒப்படைத்தல் ஒப்பந்தங்களை நீங்கள் இப்போது செய்து கொள்கின்ற நாடுகளுடன் செய்து கொள்ள வேண்டாம் என நான் கூறவில்லை. செய்து கொள்ளுங்கள். அதேநேரம், சிங்கப்பூர், டுபாய் போன்ற நாடுகளுடனும் செய்து கொண்டால் இந்த நாடு இன்று முகங்கொடுத்துள்ள மிக முக்கிய பிரச்சினைகளுக்கு ஒரு முடிவினைத் தேடிக் கொள்ள முடியும் என்றே கூறுகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் நடைபெற்ற 1977ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இந்த மீள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் மனிதப் படுகொலை, பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, இலஞ்சம், கொள்ளை, அந்நிய செலாவணி மோசடி, ஆபத்தான போதைப் பொருள் போன்ற குற்றங்களுடன் தொடர்புடைய நபர்களையே ஒப்பந்தத்தினை மேற்கொள்கின்ற இரு நாடுகளுக்கிடையில் பரஸ்பரம் கைது செய்து கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்படுகின்றது. அதே நேரம் ஒரு நாட்டில் அரசியல் புகழிடம் பெற்றவர்களை கைது செய்வதற்கு இந்த ஒப்பந்தத்தினால் அழுத்தங்களைக் கொடுக்க முடியாது என்றே தெரிய வருகின்றது.

இந்த நாட்டில் இலஞ்சம் பெற்று, கொள்ளையடித்து, அந்நிய செலாவணி மோசடி செய்து, போதைப் பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு நாட்டைவிட்டு தப்பியோடியவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள் என்றே நினைக்கின்றேன். அவரவர் எந்தெந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும் என நினைக்கின்றேன்.

அந்தந்த நாடுகளுடனும் இந்த ஒப்பந்தத்தினை செய்யுங்கள். செய்து, அவர்களைக் கைது செய்து இங்கு கொண்டு வந்து, கொள்ளையடித்த இந்த நாட்டு மக்களின் பணத்தை பெற்று, இந்த நாட்டு மக்களை சுமையற்றதொரு வாழ்க்கையை வாழ விடுங்கள் என்றே நான் கேட்டுககொள்கின்றேன்.எனத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!