போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கான ஆலோசனைகளை வழங்குவதற்காக, பிலிப்பைன்ஸ் நிபுணர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பிலிப்பைன்சுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்தே, அந்த நாட்டு அரசாங்கம், சிறப்பு நிபுணர்கள் குழுவொன்றை கொழும்புக்கு அனுப்பவுள்ளது.
இந்தக் குழு சிறிலங்காவின் போதைப்பொருள் பயன்பாடு, கடத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒழிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.
இது தொடர்பாக பிலிப்பைன்ஸ் தேசிய காவல்துறை தலைமையகத்துக்கு சிறிலங்கா அதிபர் மேற்கொண்ட பயணத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசாங்கம் ஈவிரக்கமின்றி முன்னெடுத்து வருகிறது.
2016ஆம் ஆண்டில் இருந்து 5000 பேர் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று படுகொலை செய்யப்பட்டனர். இந்த தொகை 20 ஆயிரத்துக்கும் அதிகம் என்று மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
பிலிப்பைன்சின் முன்மாதிரியைப் பின்பற்றப் போவதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இது பரவலான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!