பாராளுமன்ற மோதல் அறிக்கை – இன்று சபாநாயகரிடம்!

பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்கள் சம்பந்தமாக விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அதனை சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைத்து, அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை தொடர்பிலும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி கட்சிகளை சார்ந்த உறுப்பினர்கள் மீது மேற்படி அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பிரதான இரண்டு கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்ட அரசியல் முரண்பாடுகளின் போது கடந்த நவம்பர் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் மோதல்களை அடுத்து நாட்டில் பாரிய குழப்பநிலை உருவாகியது.

இதனை அடுத்து பாராளுமன்ற வாரத்தில் ஏற்பட்ட குழப்பங்களின் போது அரச ஊழியர்களை தாக்கிய மற்றும் அரச சொத்துக்களை சேதமாக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் எழுவர் கொண்ட பாராளுமன்ற விசாரணைக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!