“ரூ.8,100 கோடி மோசடி” – வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்கள்!

குஜராத்தை சேர்ந்த முன்னணி மருந்து நிறுவனம் ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட். ரூ.8 ஆயிரத்து 100 கோடி வங்கிக்கடன் மோசடி செய்தது தொடர்பாக, அந்த நிறுவனத்தின் அதிபர்கள் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா, சேத்தன் குமார், தீப்தி சேத்தன், ஹிதேஷ்குமார் நரேந்திரபாய் படேல் ஆகியோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கப்பிரிவு வழக்கு பதிவு செய்தது. டெல்லியில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணை நடந்து வருகிறது. 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சில சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. கோர்ட்டு, காலவரையற்ற பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், டெல்லி கோர்ட்டில் நீதிபதி சதீஷ் குமார் அரோரா முன்பு நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப்பிரிவு சார்பில் ஆஜரான வக்கீல் நிதேஷ் ராணா கூறியதாவது:-

ஸ்டெர்லிங் நிறுவன அதிபர்கள் 4 பேரும் இத்தாலி மற்றும் நைஜீரியாவில் பதுங்கி இருக்கிறார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப அடிக்கடி நாட்டை மாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக ‘ரெட் கார்னர் நோட்டீஸ்‘ பிறப்பிக்க சர்வதேச போலீசை அணுக விரும்புகிறோம். அவர்களை நாடு கடத்தி அழைத்துவர நடவடிக்கை தொடங்கப்பட்டு இருக்கிறது. அதற்கு கோர்ட்டு ஒப்புதல் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!