முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புத்தல் சிலை வைக்கப்பட்ட விவகாரத்தில், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை அடுத்த தவணை நீதிமன்றில் முற்படுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி வரை அந்தப் பகுதியில் முதலாம் தரப்பினரோ இரண்டாம் தரப்பினரோ எந்தவிதமான அபிவிருத்தி வேலைகளையும் செய்யக்கூடாது என்றும் நீதிமன்று உத்தரவிட்டது.
கோவில் வளாகத்தில் கடந்த 14ஆந் திகதி தமிழ் மக்கள் பொங்கல் வழிபாடுகளுக்காகச் சென்ற வேளை அந்தப் பகுதியில் குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் மக்களுக்குமிடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிஸார் அதனைத் தீர்த்துவைத்த நிலையில் அந்த இருதரப்பினருமே முல்லைத்தீவில் சமாதானக் குலைவை ஏற்படுத்த முற்பட்டனர் என்று பொலிஸார் குற்றஞ்சாட்டி இருதரப்பினருக்கு எதிராகவும் முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி லெனின்குமார் முன்னிலையில் வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர். சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை நேற்றுமுன்தினம் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது இருதரப்பினரும் தத்தமது வாதங்களை முன்வைத்தனர். வழக்கின் முதலாம் தரப்பான பௌத்த பிக்கு சார்பில் பெரும்பான்மையின சட்டத்தரணி ஒருவர் முற்பட்டிருந்தார். வழக்கு விடயங்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது கருத்துக்கூற மறுத்துவிட்டார்.
இரண்டாம் தரப்பினரான ஆலய நிர்வாகத்தினர் சார்பில் 13சட்டத் தரணிகள் மன்றில் முற்பட்டனர். அவர்களில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தாவது:
முதலாம் தரப்பான பௌத்த பிக்குவின் சார்பில் முற்பட்ட சட்டத்தரணி அரசிதழ் ஒன்றில் தொல்பொருட் திணைக்களம் அந்தக் குறித்த இடத்தைத் தொல்பொருட் திணைக்களத்துக்குரிய பகுதியாக அறிவித்ததாக ஒரு ஆவணத்தையும், குறித்த இடத்திலே கட்டடங்களைக் கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது என்பதாக மற்றொரு ஆவணத்தையும் சமர்ப்பித்தார்கள். அந்த அரசிதழில் குறித்த இடத்தின் பெயர் செட்டிமலை எனவும், செட்டிமலைக் கிராமம், செட்டிமலை கிராம அலுவலர் பிரிவு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மன்றில் தெரிவித்தனர்.
நாங்கள் அதை மறுத்துரைத்தோம். அவ்வாறானதொரு இடம் அங்கு இல்லை என்றும், தொல்பொருட் திணைக்களத்தால் வழங்கப்பட்ட அனுமதிக் கடிதத்தில் எந்தப் பகுதி, எந்த இடம், எவ்வளவு பரப்பு என்பன இல்லை என்றும்கூறி நாங்கள் கடும் ஆட்சேபனை தெரிவித்தோம். அதனையடுத்து, முதலாம் தரப்பினர் இந்த விடயத்தைச் சுமுகமாகத் தீர்ப்பதற்குச் சாத்தியக்கூறு இருப்பதாகவும், சுமுகமாகத் தீர்க்க விரும்புவதாகவும் கூறினர்.
அதனடிப்படையில் தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தை அடுத்த தவணை நீதிமன்றில் முற்படுமாறும், வளாகத்தில் அபிவிருத்தி வேலைகள் இடம்பெறக்கூடாது என்றும் நீதிமன்று உத்தரவிட்டது.
குறித்த பிணக்குக்குரிய இடத்திலுள்ள ஆலயம் மற்றும் விகாரை தொடர்பாக சமாதானமாகத் தீர்வு எட்டமுடியுமா என்று ஆராய்வதற்கும், தேவையேற்படின் இரண்டாம் தரப்பான நீராவியடிப் பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினர் தமது தரப்புக் கருத்துக்களை முன்வைக்கலாம் என்றும்கூறிய நீதிமன்று வழக்கை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!