வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலி!

வங்காளதேச நாட்டில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று மின்னல் தாக்கியதில் பெண்கள், கல்லூரி மாணவிகள் உள்பட 14 பேர் பலியாகினர். இதுதொடர்பாக மீட்பு படையினர் கூறுகையில், சிராஜ்கஞ்ச், சுனம்கஞ்ச், மகுரா, நோகாலி மற்றும் ரங்கமதி மாவட்டங்களில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது. இதில் 14 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.

இதில் கல்லூரி மாணவிகள், பெண்கள் உள்பட பலரும் அடங்குவர். பலத்த மழையை தொடர்ந்து ஜமுனா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து செய்து முடிக்கும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!