தேசிய கொடி அவமதிப்பு- திருப்பூர் பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு

திருப்பூரில் தேசிய கொடியை அவமதித்ததாக பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா சாமளாபுரம் அருகே உள்ள கள்ளப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக ஆனந்தியும், ஆசிரியராக தமிழ் மணியும் பணியாற்றி வருகிறார்கள். குடியரசு தின விழாவின் போது அனைத்து பள்ளிகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் இந்த பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி தேசிய கொடியை ஏற்றவில்லை. அதற்கு மாறாக 21-ந் தேதி பள்ளியில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை இறக்காமல் அப்படியே விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தாங்களே முன் வந்து தேசிய கொடியை இறக்கி உள்ளனர். இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரி கனகமணி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது 21-ந் தேதி ஏற்றப்பட்ட தேசிய கொடி இறக்கப்படாமலும், குடியரசு தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமலும் இருந்தது தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை ஆனந்தி, ஆசிரியர் தமிழ் மணி ஆகியோரை சஸ்பெண்டு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தேசிய கொடியை தலைமை ஆசிரியை அவமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!