பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வைத்திய உதவியாளர் கைது!

தென்கொரியாவில் 1000க்கும் மேற்பட்டோருக்கு சட்டவிரோதமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டில், மருத்துவ உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்கொரியாவின் சியோலில் உள்ள ஜூங்ரங் பகுதியில் தனியார் வைத்தியசாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 70 வயது நிரம்பிய வைத்திய உதவியாளர் ஒருவர், கடந்த (2015-2018) மூன்று ஆண்டுகளாக, 1000க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உடல் அழகிற்காக செய்யப்படும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையை சட்டத்திற்கு புறம்பாக செய்து வந்துள்ளார்.

இந்த சட்ட விரோதமான சிகிச்சை மூலம் அவர் இதுவரை சுமார் ஒரு பில்லியன் சம்பாதித்ததாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பொலில் புகார் அளிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணை நடத்தி வைத்திய உதவியாளர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மருத்துவமனை உரிமையாளரான தலைமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வைத்திய உதவியாளர், வைத்தியசாலைக்கு அருகில் உள்ள அழகு நிலையம் மற்றும் தோல் பராமரிப்பு நிறுவனங்களில் இருந்து வாடிக்கையாளர்ககளைக் கவர்ந்து, அவர்களுக்கு முகம், உதடு மற்றும் இரட்டை கண்ணிமை போன்ற பல அறுவை சிகிச்சைகளை சட்டவிரோதமாக செய்துள்ளார்.

தொடர்ந்து பல அறுவை சிகிச்சைகள் செய்ததால், வைத்தியசாலையில் பணிபுரியும் மற்ற ஊழியர்களும் குறித்த உதவியாளரை உண்மையான வைத்தியராகவே நினைத்துள்ளனர். குறித்த செய்தியை தலைமை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் உதவியாளர் இருவரும் ரகசியமாக வைத்துள்ளனர் என்பது பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும், உதவியாளரும் தங்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!