மியன்மார் அரசின் இனச் சுத்திகரிப்பில் இருந்து தப்பித்து பங்களாதேஷூக்குச் சென்று அடைக்கலம் புகுந்துள்ள சுமார் 7 லட்சம் ரொஹிங்யர்கள் புயலால் தாக்கப்படும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
அகதிகளாக இடம்பெயர்ந்தோர் பங்களாதேஷின் கசார் பகுதியில் தற்காலிகத் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். கசார் பகுதி வருடாவருடம் புயலால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் இடம். அது மலைப் பாங்கான பிரதேசமாகவும் இருப்பதால் அவ்வப்போது மண் சரிவுகளும் ஏற்படுவதுண்டு.
இதனால் ரொஹிங்யர்கள் புயலால் பெரும் அசௌகரியங்களையும் பேராபத்துக்களையும் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் புலம் பெயர்ந்தோர் அமைப்பின் அதிகாரியாகச் செயற்பட்டுவரும் மக்கியூ என்பவர் கசார் அகதிகள் முகாமின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.
ரொஹிங்ய மக்களுக்கு பன்னாட்டு உதவிகள் அவசியம் என்று தெரிவித்தார்.
‘‘பங்களாதேஷில் மழைக்காலம் தொடங்கப் போகிறது. புயல் காற்று, பலத்த மழை போன்ற நேரங்களில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். மலைப் பகுதிகளில் நிலச்சரிவும் ஆங்காங்கே நடக்கும். இந்த நிலையில் அகதிகள் முகாமில் உள்ள ரொஹிங்ய முஸ்லிம்களின் பாதுகாப்புக் கேள்விக் குறியாக உள்ளது. உடனடியாக அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். அதற்கு உலக நாடுகள் கணிசமான அளவு நிதி ஒதுக்க வேண்டும்’’ என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!