திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி – மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு

விழுப்புரத்தில் நடந்த திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் ‘மிஸ் கூவாகமாக’ சென்னையை சேர்ந்த மொபினா தேர்வு செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்துள்ளனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் நேற்று காலை விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடன நிகழ்ச்சிகள் மற்றும் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடைபெற்றது.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், மாவட்ட சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை விழுப்புரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழுப்புரம் மாவட்ட திருநங்கைகள் நலச்சங்க தலைவி ராதாம்மாள் வரவேற்றார்.

தென்னிந்திய திருநங்கைகள் கூட்டமைப்பை சேர்ந்த 72 தலைவிகள் முன்னிலை வகித்தனர். முதல்கட்டமாக திருநங்கைகளுக்கான நடனப்போட்டிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான திருநங்கைகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பாடலுக்கேற்ப நடனமாடி அசத்தினார்கள். விழாவின்போது விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் திருநங்கைகள் சிலர், நெற்கதிர்கள், முரம், வைக்கோல், மண்பானை ஆகியவற்றுடன் ‘பேஷன் ஷோ’ நடத்தினர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

அதனை தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 44 திருநங்கைகள் கலந்துகொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர். முதல் சுற்று முடிவில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாலையில் 2-ம் சுற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் சினேகன், திரைப்பட நடிகர்கள் விமல், தீபக், சுரேஷ், வெங்கட், நடிகை கஸ்தூரி உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

2-வது சுற்று முடிவில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சுற்றில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 12 பேரை விழா ஒருங்கிணைப்பாளர்கள் மேடைக்கு அழைத்தனர். பின்னர் அவர்கள் மேடையில் இருந்து இறங்க மாட்டோம் என்று தெரிவித்து, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இந்த 12 பேருக்கும் மீண்டும் 2-வது சுற்று போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து நடந்த 3-வது சுற்றில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, 15 பேரில் இருந்து ‘மிஸ்கூவாகம்’ மற்றும் 2, 3-வது இடத்துக்கான திருநங்கைகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநங்கை மொபினா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 2-வது இடத்தை சென்னை போரூரை சேர்ந்த பிரீத்தியும், 3-வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த சுபஸ்ரீயும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்ட மொபினா என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நிருபர்களிடம் கூறுகையில், இன்று என்னுடைய கனவு நிறைவேறியுள்ளது. மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் அளவுகடந்த சந்தோஷமாக உள்ளது. நான் படித்து கொண்டிருக்கும்போது எனக்குள் திருநங்கைக்கான புரிதல் ஏற்பட்டது. இதையறிந்த என்னுடைய பெற்றோர் என்னை மிகுந்த தொந்தரவு செய்தனர். இதனால் நான் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன். தற்போது மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் என்னை பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். அதுபோல் என்னைப்போன்ற திருநங்கைகளை அவர்களது பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு நன்றாக படிக்க வைத்து சாதிக்க செய்ய வேண்டும். மேலும் திருநங்கைகளுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் அரசு முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!