விமான விபத்து- சலாவுடன் மாயமான விமானியை தேடுவதற்கு 27000 பவுண்டு வழங்கிய கால்பந்து வீரர்

விமான விபத்தில் உயிரிழத்ந அர்ஜென்டினா கால்பந்து வீரர் எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக கால்பந்து வீரர் ஒருவர் 27000 பவுண்டு அளித்துள்ளார்.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் எமிலியானோ சலா. பிரான்சின் நான்டஸ் அணிக்காக விளையாடி வந்த இவரை, வேல்ஸ் நாட்டின் கார்டிப் கிளப் அணி சமீபத்தில் வாங்கியது. கடந்த ஜனவரி 19 அன்று கார்டிப் நகரில் இதற்கான ஒப்பந்தத்தில் எமிலியானோ கையெழுத்திட்டார். பின்னர் பிரான்ஸ் திரும்பிய எமிலியானோ சலா, ஜனவரி 21 மாலை ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.

சானல் தீவுகளுக்கு அருகே திடீரென அவரது விமானம் மாயமானது. விமானத்தில் பயணம் செய்த எமிலியானோ மற்றும் பைலட் குறித்து எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இதனையடுத்து போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதையடுத்து எமிலியானோ சலாவின் உடல் கடந்த 7ம் தேதி கடலுக்கடியில் கண்டறியப்பட்டது. ஆனால் விமானி டேவிட் இபோட்சன் குறித்து எந்த தகவலும் இன்றும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேடுதல் பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் போன விமானியை தேடும் பணிகளுக்காக பிரெஞ்சு கால்பந்து வீரர் கைலன் மப்பே 27000 பவுண்டு (இந்திய ரூபாய் மதிப்பில் 24,87,547) நிதியுதவி வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேரி லிங்கர் 1000 பவுண்டு வழங்கி உள்ளார்.

விமானியை தேடும் பணிக்காக அவரது குடும்பத்தினர் நிதி திரட்டி வருகின்றனர். 3 லட்சம் பவுண்டுகள் நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை 7000க்கும் மேற்பட்டோரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்டுகள் வரை நிதி வந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!