ஜெனிவாவில் மீண்டும் தீர்மானம் – தலைமை தாங்குவதாக பிரித்தானியா அறிவிப்பு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அடுத்த மாதம் சிறிலங்கா தொடர்பான பிரேரணையை கொண்டு வரும் நடவடிக்கைக்குத் தலைமை தாங்கப் போவதாக பிரித்தானியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள ஐ.நாவுக்கான பிரித்தானிய தூதரகம் இதுகுறித்து நேற்று சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான பிரேரணையின் மீது கவனம் செலுத்தப் போவதாகவும், சிரியா, தென்சூடான் தொடர்பான பிரேரணைகளையும் முன்வைக்கப் போவதாகவும் பிரித்தானியா கூறியுள்ளது.

பிரித்தானியாவுடன் இணைந்து, கனடா, ஜேர்மனி, மெசிடோனியா, மொன்ரெனிக்ரோ ஆகிய நாடுகள், சிறிலங்கா தொடர்பான பிரேரணையை முன்வைக்கவுள்ளன.

“இணை நாடுகள் மீண்டும் சிறிலங்காவுடன் இணைந்து, செயற்பட எதிர்பார்க்கிறது. இந்த ஒத்துழைப்பு 2015இல் ஆரம்பித்தது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1தீர்மானத்தின் வாக்குறுதிகளை சிறிலங்கா நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த, பேரவையுடன் இணைந்து செயற்படும்.

பிரேரணை வரைவு இயல்பான நடைமுறைப்படி இருக்கும். அத்துடன், 2015 இல் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறுவப்பட்ட செயல்முறைகளை மேலும் விரிவுபடுத்தக் கோருவதாக அமையும்.

பேரவையின் நடைமுறைகளுக்கு அமைய முறைசாரா பேச்சுக்களை நாங்கள் ஆரம்பிப்போம்.

மீண்டும் சிறிலங்கா தொடர்பான பிரேரணைக்கு பேரவையின் முழு ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்” என்றும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!