குவைத்தில் திருமணமான மூன்றே நிமிடங்களில் விவாகரத்து!!

குவைத்தில் திருமணமான மூன்றே நிமிடங்களில் தம்பதியினர் நீதிபதி முன் விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ள வினோதமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணமாகி சில வருடங்களிலோ அல்லது சில மாதங்களிலோ ஏன் சில வாரங்களிலோ கூட விவாகரத்து நடந்த சம்பவங்கள் நடந்துள்ளன.

ஆனால் திருமணம் நடந்த அன்றே அதுவும் திருமணம் நடந்த மூன்றே நிமிடங்களில் விவாகரத்து நடந்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், அந்நாட்டு சட்டத்தின் படி நீதிபதியின் முன்னால் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.

அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் வாக்குவாதம் முற்றி கணவர், மனைவியை ‘முட்டாள்’ என்று திட்டியுள்ளார்.

இதனால் கோபமடைந்த குறித்த பெண் தங்களுக்குத் திருமணம் நடத்திவைத்த நீதிபதியிடமே விவாகரத்து வழங்குமாறுக் கேட்டுள்ளார்.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் பிடிவாதமாக குறித்த பெண் விவாகரத்தைப் பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகிலேயே குறைந்த நிமிடங்கள் மட்டுமே தம்பதியாக வாழ்ந்தவர்கள் என்ற மோசமான சாதனையை குவைத் தம்பதியினர் பெற்றுள்ளனர்.

குறித்த பெண்ணின் செய்கைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்து கிடைத்து வருவதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!