குற்றவாளியின் கழுத்தில் பாம்பைச் சுற்றி சித்ரவதை செய்த பொலிஸார் – இந்தோனேஷியாவில் சம்பவம்

இந்தோனேஷியாவில் பொலிஸில் சிக்கிய குற்றவாளி தன் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்ததால், கழுத்தில் பாம்பினைச் சுற்றி ஆபத்தான விசாரணை மேற்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் கையடக்க தொலைபேசியை திருடிய வழக்கில் பப்புவா பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்தனர்.

குறித்த சந்தேகநபர் பொலிஸ் விசாரணையின்போது குற்றத்தினை ஒப்புக்கொள்ளவில்லை. எதுவும் பேசாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், மிரட்டினால் ஒப்புக்கொள்வார் என நினைத்த பொலிஸார் மலைப்பாம்பு ஒன்றினை குறித்த நபரின் கழுத்தில் போட்டு சுற்றியுள்ளனர். பின்னர் இதனை வீடியோவும் எடுத்துள்ளனர். குறித்த வீடியோவை இணையத்தளத்தில் வெளியாகி பரவியதும், கடும் சர்ச்சை எழுந்துள்ளது.

குறித்த வீடியோ பதிவில், குற்றவாளியிடம் பொலிஸார் கேள்வி கேட்டு விசாரணை நடத்தியது பதிவாகியிருந்தது. குறித்த நபர் பதிலளிக்காததையடுத்து, ஒரு அதிகாரி முகத்தின் முன் அந்த பாம்பினை கொண்டு செல்கின்றார். மேலும் ஒரு அதிகாரி எத்தனை முறை இது போன்ற கையடக்க தொலைப்பேசியை திருடி இருக்கிறாய்? என கேட்கிறார். அதற்கு குறித்த நபர் வெகு நேரம் கழித்து, ‘2 முறை’ என தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் பாம்பை கழுத்தில் சுற்றியதால் பயந்து , கண்களை மூடிக் கொள்கிறார். அப்போது அவரது வாயின் அருகில் பாம்பினைக் கொண்டு செல்கின்றனர். இது போன்று தொடர்ந்து குறித்த நபைர சித்ரவதை செய்துள்ளனர்.

குறித்த நடவடிக்கையை பலரும் கண்டித்த நிலையில், நடந்த சம்பவத்திற்கு ஜெயவிஜயா தலைமை பொலிஸ் அதிகாரி டோனி ஆனந்த ஸ்வாதயா மன்னிப்பு கோரியுள்ளார்.

குறித்த விசாரணை செய்தவர்கள் சரியான முறையை பின்பற்றவில்லை. அவர்கள் பயன்படுத்திய பாம்பு விஷமற்றது. குற்றவாளியின் உடலில் காயம் ஏதும் ஏற்படுத்தவில்லை.

மேலும் குறித்த விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!