ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லை – அதிமுக கூட்டணி பற்றி ஸ்டாலின் விமர்சனம்

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தல் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தொகுதிகளை பிரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையே, வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ம.க.வினர் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் ஒதுக்கப்படும்.

மேலும், 21 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிடும் என்றும், இந்த தொகுதிகளில் அதிமுகவுக்கு பா.ம.க. ஆதரவு அளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக-பாமக கூட்டணி குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது;

2009-ம் ஆண்டு தேர்தலில் தோற்றுப்போன கூட்டணி பா.ம.க.-அ.தி.மு.க. கூட்டணி. அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து அண்மையில் புத்தகம் வெளியிட்டுவிட்டு, தற்போது அக்கட்சியுடன் ராமதாஸ் கூட்டணி வைத்துள்ளார். நாட்டைப் பற்றி ராமதாசுக்கு கவலையில்லை.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் கிடைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியைப் பற்றி விமர்சித்து புத்தகம் எழுதிய பாமக, தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ளது அவமானமாக இல்லையா? ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!