சிறிலங்கா அதிபருக்கு எதிராக மற்றொரு அரசியலமைப்பு மீறல் வழக்கு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நிரந்தர தலைவரை நியமிக்காமல் அரசியலமைப்பை மீறி வருகிறார் என்று குற்றம்சாட்டியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.

14 நாட்களுக்கு வரையே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் ஒருவரை நியமிக்க முடியும் என்ற போதும், நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவை மீண்டும் மீண்டும் நியமிக்கும் சிறிங்கா அதிபரின் நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தியே இந்த மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கு அரசியலமைப்பு சபையினால் நிராகரிக்கப்பட்ட நீதியரசர் தீபாலி விஜேசுந்தரவின் பெயரை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மீண்டும் மீண்டும் பரிந்துரைத்து வருகிறார்.

மேல்முறையீட்டு நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகள் மற்றும் ஏனைய உயர்மட்ட அரச பதவிகளுக்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரத்துடனேயே நியமனங்களை மேற்கொள்ள முடியும்.

எனினும், 14 நாட்கள் வரை பதில் நியமனங்களை சிறிலங்கா அதிபரினால் வழங்க முடியும் என்பதுகுறிப்பிடத்தக்கது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!