விண்வெளிக்கு செல்கிறது சிறிலங்காவின் முதல் செய்மதி ராவணா -1

ராவணா-1 என்று பெயரிடப்பட்ட முதலாவது ஆய்வு செய்மதியை சிறிலங்கா வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ளதாக, ஆதர் சி கிளார்க் நிறுவகம் தெரிவித்துள்ளது.

மிகச் சிறியளவிலான, சதுர வடிவத்தில் அமைந்த இந்த செய்மதியை, ஆர்தர் சி கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவகத்தைச் சேர்ந்த இளம் ஆய்வுப் பொறியாளர்களான தரிந்து தயாரத்னவும், துலானி சாமிக்கவும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

1.1 கிலோ எடையும், 1000 கியூபிக் சென்ரி மீற்றர் அளவும் கொண்ட இந்த செய்மதி, ஜப்பானின் யூஷூ தொழில்நுட்ப நிறுவகத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ராவணா-1 எனப் பெயரிடப்பட்ட இந்த செய்மதி, ஜப்பானின் விண்வெளி கண்டுபிடிப்புகள் முகவர் அமைப்பினால், நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இது அமெரிக்காவின் சைனஸ்-1 விண்வெளி ஓடத்தின் மூலம், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு ஏப்ரல் 17ஆம் நாள் அனுப்பப்படும்.

இந்த செய்மதி, சிறிலங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிராந்தியங்களைப் படம் பிடித்தல், உள்ளிட்ட 5 பணிகளை மேற்கொள்ளும்.

இது பூமியில் இருந்து 400 கி.மீ தொலைவில் விண்வெளியில் நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தது ஒன்றரை ஆண்டுகளுக்கு செயற்படக் கூடும் என்று நம்பப்படுகின்ற போதும், இந்தச் செய்மதி, 5 ஆண்டுகள் வரையும் தொழிற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!