எகிப்தில் ஒரே நேரத்தில் 9 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

எகிப்தில் காசிம் பராகாத் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் 28 பேரில் 9 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

எகிப்தின் மூத்த அரச சட்டத்தரணியாக காசிம் பராகாத் பணிபுரிந்துவந்தார். இவர் பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, எண்ணற்ற பயங்கரவாதிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் திகதி தலைநகர் கெய்ரோவில் காசிம் பராகாத் சென்று கொண்டிருந்த கார் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதி வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காசிம் பராகாத் கொலை வழக்கில் பயங்கரவாதிகள் 28 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணையில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, கடந்த 2017ஆம் ஆண்டு அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அந்த 28 பேரில் 9 பேருக்கு நேற்று முன்தினம் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கெய்ரோவில் உள்ள சிறையில் 9 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இந்த மாதத்தில் மட்டும் இவர்களுடன் சேர்த்து மொத்தம் 15 பேருக்கு மரண நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!