ஒசாமாவின் மகனை காட்டிக்கொடுத்தால் சன்மானம்

ஒசாமா பின் லேடனின் மகன்களில் ஒருவரான ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களைத் தருபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளிவிவகார துறை அறிவித்துள்ளது.

அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவை பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் ஹம்சா பின் லேடன் கடந்த 2017 ஆம் ஆண்டு சர்வதேசத் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். அல்-கொய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஹம்சா உருவாகி வருவதாக தெரிவித்துள்ள அமெரிக்கா, அவரை தேடும் பணியில் இறங்கியுள்ளது.

தெற்கு மத்திய ஆசியாவில் எங்கு வேண்டுமானாலும் அவர் இருக்கலாம் என ஹம்சாவின் இருப்பிடம் குறித்து அமெரிக்கா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!