புதுவை அருகே இன்று பெண் கழுத்தை அறுத்து படுகொலை

புதுவை அருகே இன்று காலை கடைக்கு சென்று திரும்பிய பெண்ணை மர்ம மனிதர்கள் கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மாநிலம் மடுகரை கம்பத்தான் வீதியை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி கங்கா (வயது 27). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

ராஜசேகர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். கங்கா மடுகரையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை 5.30 மணியளவில் கணவர் மற்றும் 2 குழந்தைகள் வீட்டில் படுத்திருந்த நிலையில் கங்கா மட்டும் எழுந்து அருகில் உள்ள கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்த பால் பூத்தில் பால் வாங்கிவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் அவருடன் பேசியபடி வந்தனர். அவர்கள் திடீரென கங்காவை கழுத்தை அறுத்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.

கங்கா இறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மடுகரை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கணவருக்கு கூட தெரியாது.

போலீசார் அவரது வீட்டுக்கு சென்றபோது ராஜசேகர் தனது 2 குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி வி‌ஷயத்தை சொன்னார்கள். கங்காவை கொலை செய்தவர்கள் யார்? என்ற விவரம் தெரிய வில்லை.

மடுகரை இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் இது சம்பந்தமாக விசாரித்து வருகிறார்கள்.

கங்காவின் சொந்த ஊர் மடுகரையை அடுத்த தமிழக பகுதியான பட்டாம்பாக்கம் வாழப்பட்டு ஆகும். ராஜசேகரின் சொந்த ஊர் அதன் அருகில் உள்ள சொர்ணாவூர்.

இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். சில ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனாலும் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது.

அதுவரை சொர்ணாவூரில் வசித்து வந்த அவர்கள் 6 மாதத்துக்கு முன்பு மடுகரைக்கு குடிபெயர்ந்தனர். கங்கா அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசியதாகவும், இதனால் சந்தேகம் அடைந்த ராஜசேகர் அவருடன் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக இருவரும் விவகாரத்து பெறவும் முயற்சித்துள்ளனர். இந்த நிலையில் தான் கங்கா கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொன்றவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒருவேளை கொலையின் பின்னணியில் கணவர் இருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. எனவே அதுபற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கங்கா நைட்டி அணிந்த நிலையில் தான் கடைக்கு சென்றுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் அவர் வாங்கி வந்த பொருட்கள் சிதறி கிடந்தன.

புதுவை சபாநாயகர் வைத்திலிங்கத்தின் சொந்த ஊர் மடுகரை ஆகும். அவரது பூர்வீக வீட்டில் இருந்து 10 மீட்டர் தூரத்தில் தான் இந்த கொலை நடந்தது குறிப்பிடத்தக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!