மகிந்த அணியில் இருந்து வெளியேறுவோம் – விமல் வீரவன்ச எச்சரிக்கை

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிக்கும் ஐதேக- ஜேவிபி திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் இருந்து விலகிக் கொள்ளாவிட்டால், மகிந்த ராஜபக்ச அணியில் இருந்து வெளியேறப் போவதாக விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியிலும், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி பங்காளிக் கட்சியாக இருந்து வருகிறது.

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச, கூட்டு எதிரணியின் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வரும், விமல் வீரவன்ச, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறை ஒழிக்கப்படுவதற்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையிலேயே, கோத்தாபய ராஜபக்ச, அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதை தடுப்பதற்காக, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு இணக்கப்பாடு காணப்பட்டால், மகிந்த அணியில் இருந்து விலகவும் தயங்கமாட்டோம் என்று, விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!