உலகத்தில் பல நாடுகளில் ஜனநாயகம் செழித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், ஊடக சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் பலமிக்கதொரு தூணாக விளங்கிவருகின்றது. ஊடக சுதந்திரம் என்பது செய்திகளை வௌியிடுகின்ற நிறுவனங்கள் சுதந்திரமாக தமது எண்ணங்களை, கருத்துக்களை செய்திகளாக, கட்டுரை ஆக்கங்களாக வௌிப்படுத்துவதற்குரிய உரிமையாகும்.
ஒரு நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை வெளிப்படுத்துவது, அந்த நாட்டின் ஊடக சுதந்திரமே
எந்தவொரு நாட்டில் ஊடகத்துறைக்கும், ஊடகவியலாளர்களுக்கும் சுதந்திரமும், பாதுகாப்பும் கிட்டியுள்ளதோ, அந்த நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு நல்லாட்சி நடைபெறுவதுடன், மக்களின் வாழ்வாதாரமும் பல்வேறு இனங்களுக்கிடையிலான நல்லுறவும், ஒற்றுமையும் பேணப்பட்டு வருகின்றது என்பதை உறுதிசெய்திட இயலும்.
பத்திரிகைகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோர்களது உரிமைகளையும், சுதந்திரத்தை யும் பாதுகாக்கும் பொறுப்பு, அந்தந்த நாட்டு அரசுக்களுக்குரிய கடப்பாடாகும். ஊடகங்கள் வரிசையில் பத்திரிகைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், புத்தகவௌியீடுகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் என்பவை அடங்குகின்றன. உலகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மொழிகளிலும் பத்திரிகைகள் தினமும் வௌிவந்து கொண்டிருக்கின்றன.
ஊடகத்துறையில் தினமும் வெளியாகின்ற பத்திரிகைகள் உலகத்தின் அரசியலையும் ஆட்சியையும் கவிழ்க்கக்கூடிய, மாற்றத்தை ஏற்படுத்தவல்ல சக்தி பெற்றவையாக இன்றும் விளங்கி வருகின்றன. ஊடக சட்டங்களின் கீழ் கருத்துக்களை வௌியிடும் சுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பத்திரிகைகள் உலகத்தின் கண்ணாடி
எனக் கருதப்படுபவை
கோடிக்கணக்கான மக்கள் பத்திரிகைச் செய்திகளை வாசிப்பதில் ஆர்வமுள்ளவர்களாக இருந்து வருகின்றனர். உலகத்தின் புதினங்களை, நாட்டு நடப்புக்களை அறிவதிலும், செய்திகளின் உண்மைத்தன்மைகளைப் பகிர்வதிலும், விமர்சனம் செய்வதிலும் அக்கறைகொண்டவர்களாக அவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் பத்திரிகைகள் உலகத்தின் கண்ணாடி எனக் கொள்ளப்படுகின்றன. பத்திரிகையின் வாசிப்பும், அதன்மூலம் ஏற்படும் தாக்கமும் உலக அரங்கில் முக்கியத்துவம் பெறுகின்றன.
சட்டம் என்பது எவரையும் வேறுபடுத்திக் காட்டவில்லை. சட்டத்தின் முன் சகலரும் சமமானவர்கள். வெகுசன ஊடகங்கள் மற்றும் தொடர்பாடல் என்பவை யுனெஸ்கோவின் கொள்கைத் திட்டங்களின் கீழ் அடங்குகின்றன. ஊடகம் தொடர்பாக உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் ஒரு அம்சமாக யுனெஸ்கோ 14பேர் கொண்ட ஆணைக்குழுவொன்றை 1972 ஆம் ஆண்டு அமைத்தது. ஊடகங்களின் பங்களிப்புக்கள், ஊடகங்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அந்த ஆணைக்குழுவுக்கு அயர்லாந்து தேசத்தைச் சேர்ந்த சைம் மக்கீல்ட் என்பவர் தலைமை தாங்கினார்.
குறித்த ஆணைக்குழு பல நாடுகளில் விசாரணைகள், ஆய்வுகளை நடத்தி ஊடகங்களின் செயற்பாடுகள் பற்றியும், பங்களிப்புக்கள் பற்றியும் பல முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது. முன்மொழிவுகள் யாவும் ஒன்று சேர்க்கப்பட்டு பெரியதொரு புத்தகமாக 1980ஆம் ஆண்டு வௌியிடப்பட்டது. ஆணைக்குழுவின் அறிக்கையில் ஊடகங்களின் பங்களிப்புத் தொடர்பாக எட்டு முக்கிய விடயங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
தகவல் வழங்குதல், சமூகமயப்படுத்தல், ஊக்குவித்தல், விவாதங்களும் கலந்துரையாடல்களும் ,அறிவூட்டல், கலாசாரப் பரம்பல், பொழுது போக்கு மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுடன் ஒருங்கமைக்கப்பட்டவையே அவையாகும்.
ஆரோக்கியமான ஊடகச் செயற்பாடுகள்
நாட்டுக்கு அவசியமானவை
மக்கள் தமது கிராமத்தில், நகரத்தில், நாட்டில், உலகத்தில் என்ன நடைபெறுகின்றது என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டும். சரியான தகவல்களை அறிந்துகொள்ள வேண்டும். ஊடகங்கள் மக்களுக்கு சரியான தகவல்களை, அறிவை வழங்கி, சமூகத்தை பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பதற்கு உதவ வேண்டும். நாளாந்தம் நடைபெறுகின்ற சம்பவங்கள், செயற்பாடுகளை மக்களுக்கு செய்திகள் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஊடகங்கள் ஒரு சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் நடத்துவதுடன் சில விடயங்களைப் பகிரங்கப்படுத்தி மக்கள் சரியான தீர்மானங்களை எடுப்பதற்கு உதவியளிக்க வேண்டும்.
20ஆம் மற்றும் 21ஆம் நூற்றாண்டில் அறிவுத் திறன் மிகவும் வேகமான வளர்ச்சியடைந்துள்ளது. அறிவுத்திறன் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் மக்கள் விவசாய சமூகத்திலிருந்து அறிவுத்திறன் கூடிய சமூகத்திற்கு முன்னேறியுள்ளனர். எனவே புதிய முயற்சிகள், நவீன தொழில்நுட்பம், விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் என்பவை பற்றி ஊடகங்கள் மக்களுக்கு அறிவூட்ட வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளன.
கலாசாரம் பற்றிய விழிப்புணர்வு அல்லது கலா சாரத்தை மக்கள் மத்தியில் பரப்புவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கும் பாரம்பரிய வளர்ச்சிக்கும் ஊடகங்கள் உறுதுணையாக அமையமுடியும். இதுவும் வெகுசன ஊடகங்களின் முக்கிய கடமையாகும். ஊடகங்கள் மக்களுக்கு பொழுதுபோக்குச் சாதனங்களாக அமையவேண்டுமென சைம்மக்கீல்ட் துணைக்குழு கூறுகின்றது. சஞ்சிகைகள், குறியீடுகள், நாடகங்கள், நாட்டியம், ஒலி, ஓவியம், நகைச்சுவை, விளையாட்டு போன்றவற்றால் மக்களை மகிழ்வித்தல் அல்லது பொழுதுபோக்க உதவியளித்தல் இதன் குறிக்கோள் ஆகிறது.
சைம்மக்கீல்ட் ஆணைக்குழு இறுதியாக அடையாளப்படுத்தியிருப்பது ஊடகங்களின் ஓர் இணைப்புப் பணியே. மாறுபட்ட சமூகங்களுக்கிடையில் சமத்துவத்தைப் பேணுவது என இது அர்த்தப்படுகின்றது. இப்படியான எட்டு விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது.
உலகத்தில் ஏறக்குறைய 200 நாடுகள் இருக்கின்றன. ஐ. நா. சபையில் 192 நாடுகள் வரையில் அங்கத்துவம் வகிக்கின்றன. சகல நாடுகள் மத்தியிலும் கலாசார வேறுபாடுகள் உள்ளன. வேறுபட்ட கலாசாரங்களுக்கிடையில் சமத்துவத்தையும், சமாதானத்தையும் பேணி சமூகங்களை விட்டுக்கொடுப்புடன் செயற்படவைப்பதே ஊடகங்களின் பங்காகும்.
இலங்கையில் கடும் பாதிப்புக்கு உள்ளான
ஊடக சுதந்திரம்
ஊடக சுதந்திரம், இலங்கையில் சிறப்பானதாகப் பேணப்படவில்லை என்பது கடந்த பத்துவருடங்களுக்கு மேலாக முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டாகும். மூவின மக்கள் வாழுகின்ற இலங்கையில் சிறுபான்மை யினமாகிய தமிழினம், விடுதலைவேண்டி ஆயுதவழியில் தமது போராட்டத்தை 1983ஆம் ஆண்டில் ஆரம்பித்த காலம்தொட்டு இன்று வரையில் , பத்திரிகைச் சுதந்திரமும், ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் பல்வேறு பாதிப்புக்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தமை வரலாற்றுப் பதிவுகள்.
நாட்டிலுள்ள அரசுகளுக்கு எதிரான போர்களினால் ஊடக சுதந்திரம் மற்றும் செய்திகளை வௌியிடும் உரிமைகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஊடகவியலாளர்கள் பலர் பல தியாகங்களையும், பலகட்டங்களில் தமது உயிர்களையும் பலி கொடுக்கவேண்டியதொரு நிலையும் ஏற்பட்டிருந்தது. ஊடகத்தொழிலை நேரடியாக மக்களோடு தொடர்பு பேணி ஆற்ற முடியாத அளவுக்கு ஊடகவியலாளர்கள் பல அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
அச்சுறுத்தல்கள், தொந்தரவுகள், செய்தித்தணிக்கைகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்க வேண்டி யிருந்ததுடன், பல துன்பங்களுக்கு மத்தியில் ஊடக சுதந்திரத்திற்காகவும், தொடர்ந்து தகவல்களை வழங்கும் சுதந்திரத்திற்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
உலகில் வாழ்வதற்கு மிகவும் சவாலான , பயங்கரநாடுகளில் இலங்கையும் ஒன்றென பன்னாட்டு ஊடக சுதந்திர ஸ்தாபனத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது. பரிஸ் நாட்டிலுள்ள ( RSF ) ஆர் .எஸ் .எப். எனப்படும் ஊடக ஸ்தாபனம் பத்திரிகைச் சுதந்திரத்திற்கு உலகத்திலேயே மிகவும் குறைந்தளவு மதிப்புக் கொடுக்கின்ற நாடு இலங்கை என, 2013ஆம் ஆண்டில் குற்றம் சுமத்தியிருந்தது. ஊடகவியலாளரைப்பாதுகாக்கும் குழு எனப்படும் அமைப்பு தயாரித்த ஊடகத்துக்கு தீமை விளைவிக்கும் நாடுகளின் அட்டவணையில் இலங்கை முன்னுரிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்காலப்பகுதியில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போன ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களின் எண்ணிக்கை அதிகமெனக் கணக்கிடப்பட்டிருக்கின்றது. முன்னைநாள் அரசுத் தலைவரான சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில், சுதந்திர ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன், மட்டக்களப்பில் எஸ். நடேசன், யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகையில் பணியாற்றிய ஐ. சண்முகலிங்கம், தராக்கி சிவராம் போன்ற ஊடகவியலாளர்கள் 2000ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுக்கிடையில் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், 2006ஆம் ஆண்டில் ‘சுடரொளி’ பத்திரிகையின் ஊடகவியலாளரான சுகிர்தராஜனும் திருகோணமலையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். 1990ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் ரிச்சர்ட் சொய்சா, அதனைத் தொடர்ந்து லேக்ஹெவுஸ் பத்திரிகையாளர் எம். செல்வராஜா உட்பட பலர் கொல்லப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமலும் போயிருந்தனர். அவர்களில் பலரின் நிலைமை என்ன வென்பது கூட இன்றுவரை தெரியவில்லை.
2006 – 2008க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கையில்
ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்
ஜனவரி 2006ஆம் ஆண்டிலிருந்து டிசம்பர் மாதம் 2008வரையில் இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 20இற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி வௌிநாடுகளில் தஞ்சடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு முன்னர் வௌியிட்ட அறிக்கையில் சுதந்திர சுட்டெண் வரிசையில் 169நாடுகளின் வரிசையில் இலங்கை 153ஆவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னைநாள் அரசுத்தலைவரான மகிந்த ராஜாபக்சவின் ஆட்சியில் ஊடகவியலாளர்களது நிலைமையும், ஊடகங்களினதும் சுதந்திரமும் பல மடங்கு மோசமாகிவிட்டிருந்ததாக பல தரப்புகளினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. போர் இடம்பெற்ற வேளையில் தமிழினத்துக்கெதிராக மேற்கொள் ளப்பட்ட கொடுமைகளை பல தமிழ் ஊடகவியலாளர்கள் உலகத்தின் முன்னால் வௌிக் கொண்டுவந்தனர். மும்மொழி மூலம் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர். இதற்கெல்லாம் பரிசாக படுகொலைகளை ஆட்சியாளர்களும், தமிழ்த் துரோகக் கும்பல்களும் வழங்கியிருந்தன.
போர் இடம்பெற்ற காலத்தில் 1987 இல் இந்தியப்படைகளினால் முரசொலி, ஈழநாதம் பத்திரிகைகள் குண்டு வைத்து தாக்கப்பட்டன. மகிந்த ஆட்சிக்காலத்தில் ஊடக உதவியாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
நாடொன்றில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட
ஊடகங்களால் உதவ இயலும்
நாட்டின் தமிழ் ஊடகத்துறையானது, கடந்தகால ஆட்சியாளர்களையும், இன்றைய ஆட்சியாளர்களையும் நம்பிப் பயனிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் விடயத்தில் இன்றுவரை எந்தவித நீதி விசாரணையும் முன்னெடுக்க ப் படவில்லை. வடக்கு கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட பல ஊடகவியலாளர்களில் ஒரு ஊடகவியலாளருக்குரிய விசாரணைகளைக்கூட இதுவரையில் நல்லாட்சி அரசு ஆரம்பித்ததில்லை.
ஊடகவியலாளரான தராக்கி சிவராமின் படுகொலைக்கு 13 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்கவில்லை. ஊடகவியலாளர்களுக்கான நீதி இந்த நாட்டில் மறுக்கப்பட்டுள்ளது. மாறி மாறி வருகின்ற அரசுகள், தொடர்ந்தும் தமிழ் ஊடகத்துறையை ஏமாற்றி வந்துள்ளன.
இலங்கையில் சகல மொழி ஊடகங்களும், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே சமாதானத்தையும், சக வாழ்வையும் ஏற்படுத்த வேண்டும். தமிழ் ஊடகங்களைப்பொறுத்த வரையில் இனப்பிரச்சினைக்கான தீர்வானது, சுமுகமாகத்தீர்க்கப்பட வேண்டும். மூவினமக்ககளும் சம உரிமைகளோடு வாழ வேண்டும். ஜனநாயக ஆட்சி நடைபெற வேண்டும். குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தற்போதைய அவல நிலை மற்றும், வேதனைகளை அச்சு ஊடகங்கள் இன்றும் ஒரே குரலில் எடுத்துச் சொல்கின்றன. அனைத்துத் தமிழ் ஊடகங்களின் பணியானது முக்கியமானதாகவே இன்றும் இருந்து வருகின்றது.
ஊடகவியலாளர்களின் பங்களிப்புக்களும், அர்ப்பணிப்புக்களும் போற்றுதற்குரியவை. சர்வதேசம் வரை கொண்டு செல்லக்கூடிய தமிழினத்தின் சகல பிரச்சினைகளுக்கும் மறைமுக அச்சுறுத்தல்கள் இல்லாமலில்லை. அப்படிப்பட்ட நிலையில் மேலும் மேலும் உண்மைச் சம்பவங்களை துணிச்சலோடு மக்கள்மத்தியில் கொண்டு செல்கின்ற, மேலோங்கிய பணி ஊடகவியலாளர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் என்றும் முக்கிய கடமைகளாக இருக்கவேண்டும். உலகத்தின் பார்வையில் போர் இடம்பெற்ற காலத்திலும், அதற்குப் பின்னரான காலங்களிலும், இலங்கை அரசினால் தமிழ் மக்களுக்கெதிராக சிங்கள ஆட்சி யாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து அராஜக நடவடிக்கைகள் இன்று அம்பலத்துக்கு வந்த பின்னர், இலங்கை அரசும் அவை குறித்து அஞ்சிக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.வௌிநாட்டிலிருந்து வருகின்ற இராஜ தந்திரிகள் பத்திரிகைத்துறை சார்ந்த ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாடுவதற்கும் தமிழ்ப்பத்திரிகைகளும் முக்கிய காரணமாகும். உலக ஊடக சுதந்திர தினமாகிய இன்று (03.05.2018) ஊடகப்பணிகள் சிறப்புடன் தொடர வேண்டுமென வற்புறத்துவதை எமது கடமை எனக் கருத வேண்டும். இலங்கை மக்களின் தீர்வுக்கும் சமாதானத்துக்கும் ஊடகங்களது பங் களிப்பு தொடர வேண்டும்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!