புதிய அரசியலமைப்பை தோற்கடிக்க வேண்டும்! -கஜேந்திரகுமார்

புதிய அரசியலமைப்புக்கான முயற்சியை தமிழ்த் தேசம் ஒன்றிணைந்து நிராகரிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

“தமிழ்த் தேசத்திற்குள் இருக்கும் அனைத்து மக்களும் முழுமையாக விடுதலை அடையக்கூடிய வகையில், நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோளாக இருந்தது. சிங்கள தேசத்தின் எமது இனத்திற்கெதிரான அடக்குமுறைக்கு எதிராகப் போராடுவதென்பது எமது செயற்பாடுகளில் ஒரு அங்கம் மட்டுமே. இந்தத்தீவில் ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றதென்பதை சர்வதேசத்திற்குச் சொல்லக்கூடிய சூழல் நாம் இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புக்களை நிராகரித்து வந்ததால்தான் அமைந்தது. இந்நிலையிலே கொண்டு வரப்படவிருக்கும் புதிய அரசியல் அமைப்புக்கான முயற்சியை தமிழ்த்தேசம் எதிர்க்க வேண்டும்” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!