உத்தரபிரதேசத்தில் வினோதம்- மாயமான கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு

உத்தரபிரதேச முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போன தனது கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு தரப்படும் என்று அறிவித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரை சேர்ந்தவர் சனம் அலி கான் (37). இவர் முன்னாள் அரச குடும்பத்தை சேர்ந்தவர். அவர் கடந்த 9 ஆண்டுகளாக ஒரு பச்சைக் கிளி வளர்த்து வந்தார்.

நன்றாக பேசும் அந்த கிளிக்கு மித்து என்கிற பவுலி என பெயரிட்டு இருந்தார். அந்த கிளியை கடந்த சில நாட்களாக காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

காணாமல் போன கிளியின் போட்டோ ‘வாட்ஸ் அப்’பில் வெளியிடப்பட்டது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் எந்த தகவலும் இல்லை.

எனவே, காணாமல் போன கிளியை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரிக்‌ஷாவில் ஒலி பெருக்கி கட்டி அதன் மூலம் மைக்கில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.

இந்த கிளி குறித்து சனம் அலிகான் கூறும்போது, 1998-ம் ஆண்டு வெளியான மவுலி என்ற இந்தி படத்தின் பெயரை இதற்கு சூட்டினேன். அது கிளி பற்றிய படமாகும். நாங்கள் டெல்லிக்கு சென்றிருந்தபோது அதை பராமரித்து வந்தவரின் கவனக்குறைவால் அது காணாமல் போய்விட்டது.

அது மிகவும் புத்திசாலி. கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஸ்கைப் ஆக அதை பயன்படுத்தி வந்தோம். அதை கண்டுபிடித்து ஒப்படைப்பவர்களுக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்றார்.

சனம் அலிகானின் சகோதரர் சகாப்சதா சல்மான் அலிகான் கூறும்போது, கிளி காணாமல் போனது எங்கள் குடும்பத்துக்கு பேரிழப்பு. கிளி மித்துவை மிகவும் அன்புடன் வளர்த்து வந்தோம். அது மீண்டும் திரும்பி வர வேண்டும் என பிரார்த்திக்கிறோம் என்றார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!